முடிந்தது பொங்கல்.. சொந்த ஊர்களிலிருந்து அவரவர் ஊர்களுக்கு விரையும் மக்கள்.. திணறும் பஸ்கள்!
நெல்லை: பொங்கல் பண்டிகை முடிந்து தாங்கள் வசித்து வரும் ஊர்களுக்கு மக்கள் குடும்பம் குடும்பமாக திரும்பத் தொடங்கியுள்ளனர். இதனால் அனைத்து பஸ்களிலும் கூட்டம் அலைமோதி வருகிறது.
தமிழர்களின் முக்கிய பண்டிகையான தை பொங்கல் விழா கடந்த 15ம் தேதி கொண்டாடப்பட்டது. இதற்காக சென்னை, கோவை, பெங்களுரு ஆகிய பகுதிகளில் வேலை பார்த்து வருவோர், வசித்து வருவோர் தங்களது சொந்த ஊருக்கு திரும்பினர். பொங்கல் முடிந்து விட்டது. கூடவே நீடித்த விடுமுறையும் இன்றோடு முடிகிறது.

இதனால் சொந்த ஊர்களுக்குத் திரும்பியோர், தாங்கள் வசித்து வரும் நகரங்களுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர். அவர்கள் தாங்கள் வசித்தும் ஊர்களுக்கு விரைய தொடங்கியுள்ளனர். இந்த காரணத்தால் ரயில், பஸ், ஆம்னி பஸ்களில் இரவு கூட்டம் அலைமோதியது. ரயிலில் நிற்க கூட இடம் இல்லாமல் பலரும் நின்றுபடி பயணம் செய்தனர்.
முக்கிய விரைவு ரயில்களில் இரண்டு மாதங்களுக்கு முன்பே முன்பதிவு முடிந்து விட்டது. இதில் பலர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். இந்த நிலையில் ஆம்னி பஸ்களில் முன்பதிவு முடிந்து விட்டதால் அரசு விரைவு பஸ்சில் இடம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. நெல்லையில் இருந்து தினமும் சென்னைக்கு 43 அரசு விரைவு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதுபோல் நெல்லை வழியாக திருவனந்தபுரத்தில் இருந்து 16 பஸ்களும், குமரியில் இருந்து 15 பஸ்களும் இயக்கப்படுகின்றன.
விரைவு ஸ்பெஷல் பஸ்களில் முன்பதிவு முடிந்து விட்டதால் சாதாரண பஸ்களில் முன்பதிவு நடந்து வருகிறது. இந்த பஸ்களில் சென்னைக்கு கட்டணமாக ரூ.350 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பஸ்களில் பயணம் செய்ய நெல்லை புதிய பஸ் நிலையத்தில் உள்ள முன்பதிவு கவுண்டரில் ஏராளமானோர் முண்டியத்து வருகின்றனர். இதில் பஸ்கள் நிரம்பியதும் மேலும் டெப்போவில் இருந்து கூடுதல் பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டு முன்பதிவு நடந்து வருகிறது. இந்த பஸ்கள் இந்த பிற்பகல் முதல் நெல்லை, கன்னியாகுமரி, நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு செல்லும் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications