கழுதை மீது ஏற்றிச்செல்லப்பட்ட பொங்கல் பரிசு.. தீராத மலை மக்களின் கோரிக்கை!
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நெக்னாமலை கிராமத்திற்கு பொங்கல் பரிசுகளை கழுதைகள் மீது ஏற்றி எடுத்துச் சென்றனர் அரசு அதிகாரிகள்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூபாய் 1,000 ரொக்கம் வழங்கும் திட்டத்தை நவம்பர் 29 ந்தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

கடந்த மாதம் உள்ளாட்சி தேர்தல் நடந்ததால் பொங்கல்பரிசு வழங்கப்படவில்லை. இதனால் நாளை முதல் வருகிற 13 ந்தேதி வரை பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப்பணம் ரூபாய் 1,000 வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெக்னாமலை கடல் மட்டத்தில் இருந்து 1500 அடி உயரத்தில் உள்ளது. இங்கு 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். விவசாயம், கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட கூலித் தொழில்களை செய்து அந்த கிராம மக்கள் பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு சாலை, மின்விளக்கு, குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். நெக்னா மலையிலிருந்து வாணியம்பாடிக்கு வர வேண்டுமென்றால் சுமார் 5 மணி நேரம் நடந்து வர வேண்டியுள்ளது.
மேலும் மலையில் வசிக்கும் பெண்கள், முதியோர், குழந்தை, கர்ப்பிணி பெண்கள் போன்றவர்களுக்கு ஏதேனும் உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டால் டோலி கட்டி சுமந்து வரும் நிலை கடந்த 70 ஆண்டுகளாக தொடர்கிறது.
இதனிடையே நெக்னாமலை கிராமத்திற்கு பொங்கல் பரிசுகளை கழுதைகள் மீது ஏற்றி எடுத்துச் சென்றுள்ளனர் அரசு அதிகாரிகள்.

தமிழ அரசின் பொங்கல் பரிசு திட்டத்தின் கீழ் அரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்புகளை நெக்னாமலை கிராம மக்களுக்கு வினியோகம் செய்வதற்காக வட்டாட்சியர் சிவப்பிரகாசம், வட்ட வழங்கல் குமார், கூட்டுறவு சங்கத் தலைவர் திருப்பதி ஆகியோர் கழுதைகள் மீது ஏற்றி எடுத்துச் சென்றனர். அரசு இலவச பொருட்களை கொடுத்தால் மட்டும் போதாது என்றும், சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தால் மட்டுமே தங்களது வாழ்வாதாரம் உயரும் என நெக்னாமலை மக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications