குமரியில் புகையில்லா பொங்கல் கொண்டாட கலெக்டர் அறிவுரை
கன்னியாகுமரி: குமரி மாவட்ட பொதுமக்கள் புகையில்லா பொங்கல் கொண்டாட வேண்டும் என மாவட்ட கலெக்டர் அறிவுரை வழங்கியுள்ளார்.
இது குறித்து குமரி மாவட்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தி அழிப்பதும், புத்தாடை அணிந்து பொங்கலை கொண்டாடுவதும் வழக்கமாக இருந்து வருகிறது. இதை தவிர்ப்பதற்காக இந்நாளில் பழைய பொருட்களை எரிப்பதால் வரும் புகை மூலமாக சுற்றுப்புறச்சூழல் மாசுபடுவதை தவிர்க்கும் நோக்கில் பழைய பொருட்களை மீண்டும் பயன்படுத்துதல், மறு சுழற்சி செய்தல், உரமாக்குதல் போன்ற செயல்களை ஊக்குவிக்கும் வகையில் இப்பொங்கலை புகையில்லா பொங்கலாக கொண்டாட முடிவு செய்யப்பட்டு உள்ளது.
எனவே இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று (9-ந் தேதி) முதல் 15-ந் தேதி வரை விழிப்புணர்வு ஏற்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் சேரும் கழிவுகளை மறு பயன்பாட்டிற்குரியது, மறு சுழற்சிக்குரியது மற்றும் மக்கும் தன்மையுடையது என மூன்று வகையாக பிரிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
மேலும் வரும் 13-ந் தேதி மற்றும் 14-ந் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தி ஒலிபெருக்கி மூலம் விளம்பரம் செய்து குப்பைகளை சேகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். மேற்படி பணிகளை உதவி இயக்குனர், அனைத்து செயல் அலுவலர்களை கண்காணித்து புகையில்லா பொங்கலை சிறப்பாக நடைபெற செய்ய வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.