திடீரென ஒதுங்கிய 'சவுண்டு' பொன்னையன்! அதிமுக பொருளாளர் பதவிக்காக மல்லுக்கட்டு?
அதிமுக பொருளாளர் பதவி கிடைக்காததாலேயே முன்னாள் அமைச்சர் சி. பொன்னையன் அமைதியாக ஒதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
சென்னை: ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து 'சின்னம்மா' சசிகலாதான் முதல்வர் என அதிகமாக பேசிவந்த எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதி பொன்னையன் திடீரென ஒதுங்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவின் பொருளாளர் பதவி தமக்கு தரப்பட வேண்டும் என பொன்னையன் மல்லுக்கட்டி வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்தவர் பொன்னையன். பின்னர் ஜெயலலிதா தலைமையையும் ஏற்றுக் கொண்டார் பொன்னையன்.

செய்தி தொடர்பாளர்
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்துவந்தார் பொன்னையன். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அதிமுகவின் செய்தி தொடர்பாளர் என்ற அடிப்படையில் அதிகமாக ஊடகங்களில் தலைகாட்டியவர் பொன்னையன்.

சின்னம்மா, பெரியம்மா
ஜெயலலிதா மறைந்த பின்னர் சசிகலாவை 'சின்னம்மாவாக்கி' ஜெயலலிதாவை 'பெரியம்மாவாக்கி' சர்ச்சைகளில் அடிபட்டார். அத்துடன் சசிகலாவே ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு என்பதற்கு ஸ்ரீராம் சிட்பண்ட்டில் 'நாமினியாக' குறிப்பிடப்பட்டிருப்பதே ஆதாரம் என கூறி பரபரப்பை கிளப்பியிருந்தார்.

ஒதுங்கிய பொன்னையன்
ஆனால் கடந்த சில வாரங்களாக பொன்னையன் திடீரென ஒதுங்கிவிட்டார். அதிமுக நிகழ்ச்சிகளில் எங்கும் பொன்னையன் தலைகாட்டவே இல்லை

திமுக தூது
இது தொடர்பாக அதிமுக வட்டாரங்களில் நாம் விசாரித்தபோது, ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து சசிகலாவை பொன்னையன் ஆதரித்தார்; அதே நேரத்தில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆட்சியைக் கவிழ்க்கவும் சில நடவடிக்கைகளை மேற்கொண்டார். அப்போது திமுக தரப்பில் இருந்தும் பொன்னையனுக்கு தூதுவிடப்பட்டதாம். ஆனால் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆட்சியை கவிழ்த்து திமுக ஆட்சி அமைத்தால் மட்டுமே தம்மால் வர முடியும் என கூறினாராம் பொன்னையன்.

பொருளாளர் பதவி
அதேநேரத்தில் மன்னார்குடி கோஷ்டியிடம் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வசம் இருக்கும் அதிமுக பொருளாளர் பதவியை தமக்கு தர வேண்டும் எனவும் கேட்டு அடம்பிடித்தாராம் பொன்னையன். ஆனால் அங்கிட்டும் இங்கிட்டுமாக தாவிக் கொண்டிருக்கும் பொன்னையன் மீது அதிருப்தியைத்தான் வெளிப்படுத்தியதாம் போயஸ் கார்டன். இதனால்தான் பொன்னையன் அமைதியாக ஒதுங்கியிருக்கிறார் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications