திருவெறும்பூர் அன்பில் மகேசுக்கு எதிர்ப்பு: மணச்சநல்லூர், ஜோலார்பேட்டையிலும் எதிர்ப்பு
திருச்சி:திருவெறும்பூர் தொகுதி வேட்பாளராக திமுக சார்பில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவெறும்பூர் தொகுதியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதேபோல மணச்சநல்லூர், ஜோலார்பேட்டையிலும் திமுக வேட்பாளர்களை மாற்றக்கோரி போராட்டம் வலுத்து வருகிறது.
சட்டசபைத் தேர்தல் மே 16ம் தேதி நடைபெறுகிறது. திமுகவில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் 13ம் தேதி மாலை வெளியிடப்பட்டது. அன்று முதலே பல தொகுதிகளில் வேட்பாளர்களை மாற்றக்கோரி திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நெல்லையில் தொடங்கி வேலூர், சேலம் என பல பகுதிகளில் வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதியின் பேரன் உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பர்தான் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. மகேஷின் தந்தை ஸ்டாலின் நண்பராவார்.
சட்டசபைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு அவர் விருப்பமனு கொடுத்திருந்தார். திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக வேட்பாளராக அன்பில் மகேஷை களம் இறக்க கட்சி மேலிடம் திட்டமிட்டிருந்தது.
கூட்டணி கட்சி பேச்சுவார்த்தை நடந்த போது ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் காங்கிரசுக்கு அந்தத் தொகுதியைக் கேட்டார். அதற்கு ஸ்டாலின், மகேஷ் என் மகன் என் வீட்டில் தான் இருக்கிறார் அவருக்குத்தான் அந்த தொகுதியைக் கேட்கிறேன் என்று சொன்னார். உடனே இளங்கோவன், ஜெரோமும் எனக்கு மகன் போல, அவருக்காகத்தான் இந்தத்தொகுதியைக் கேட்கிறேன் என்று சொல்லவே, ஸ்டாலின் தொகுதியை விட்டுக் கொடுத்து விட்டார்.
இதனால் திருவெறும்பூர் தொகுதியை மகேஷுக்கு ஒதுக்கினார் ஸ்டாலின். இது திமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாக திமுகவினர் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவிற்கும் மகேஷ் பொய்யாமொழிக்கும் எப்போதுமே முட்டல், மோதல் உண்டு. எனவே தனது ஆளுகைக்குட்பட்ட தொகுதியில் மகேஷ் பொய்யாமொழி நுழைய நேரு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.
அதே போல முன்னாள் எம்.எல்.ஏ.வான சேகரனும் மகேஷிற்கு எதிர்ப்பு. சேகரன் இதுநாள் வரை நேருவுக்கு எதிராகத் தான் இருந்தார். ஆனால் இப்போது அவர்கள் ஒன்றிணைந்து மகேஷிற்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்" என்கிறார்கள் திருவெறும்பூர் பகுதி திமுகவினர்.
மணச்சநல்லூரில் எதிர்ப்பு
இதேபோல மணச்சநல்லூர் திமுக வேட்பாளர் கணேசனுக்கு எதிராகவும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வேட்பாளரை மாற்றக்கோரி திமுகவினர் பேராணியாக சென்றதோடு சென்னைக்கும் கடிதம் அனுப்பியுள்ளனர். பல வேட்பாளர்களுக்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் திமுக தலைமை செய்வதறியாக தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜோலார்பேட்டையில் போராட்டம்
இதனிடையே வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை திமுக வேட்பாளர் கவிதாவை மாற்றக்கோரி இன்று ஏராளமானோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜோலார்பேட்டை தொகுதியை சேர்ந்தவரை நிறுத்தக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். அதிமுக அமைச்சர் வீரமணிக்கு ஆதரவாக முன்னாள் திமுக அமைச்சர் துரைமுருகன் செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளனர். தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் வேட்பாளர்களை மாற்றக்கோரி திமுகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.