பல வருட தபால்களை பண்டலாக கட்டி வீட்டில் வைத்திருந்த போஸ்ட்மேன் சஸ்பெண்ட்!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் கடிதங்களை உரியவர்களிடம் சேர்க்காமல் வீட்டில் மூட்டையாக வைத்திருந்த தபால்காரர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் தபால் நிலையத்தில் இருந்து அருகில் உள்ள கீரமங்கலம் மேற்கு, வடக்கு, கொடிக்கரம்பை மற்றும் செரியலூர் பகுதிகளுக்கு ஒரு தபால் காரர் மட்டும் தபால்கள் கொடுத்து வந்தார்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பொதுமக்களுக்கு வரும் தபால்கள் மற்றும் இளைஞர்களுக்கு வந்த நேர்காணல் கடிதம், வங்கி கடிதங்கள், வேலை உத்தரவுகள் போன்ற எந்த தபால்களும் உரிய நபர்களுக்கு கிடைக்காமல் தவித்து வந்தனர்.
பலமுறை பலர் சம்மந்தப்பட்ட தபால் நிலையத்தில் புகார் கொடுத்தும் முறைப்படி வந்து கிடைக்கப்பெறவில்லை. இந்த நிலையில் சம்மந்தப்பட்ட பகுதிக்கு தபால் கொடுக்கச் செல்லும் தபால்காரர் கீரமங்கலம் அண்ணாநகரில் உள்ள அவரது வீட்டில் அனைத்து தபால்களையும் மூட்டையாக கட்டி வைத்திருப்பது பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தெரியவந்துள்ளது.
தபால் கிடைக்காமல் வேலைகளை இழந்த இளைஞர்களின் புகாரையடுத்து ஆலங்குடியில் இருந்து வந்த அஞ்சலக அதிகாரிகள் தபால்கார் வீட்டில் சோதனை செய்த போது வீட்டுக்குள் சில ஆண்டுகளுக்கு முன்பு வந்த தபால்கள் முதல் சமீபத்தில் வந்த தபால்கள் வரை 3 மூட்டைகளில் கட்டி வைக்கப்பட்டிருந்ததை மீட்டனர். அதன் பிறகு அந்த தபால்களை தபால் நிலையத்திற்கு அள்ளிச் சென்று விசாரணை செய்தனர்.
இந்த சம்பவம் பற்றிக் கேள்விப்பட்டு பாதிக்கப்பட்ட ஏராளமான இளைஞர்கள் தபால் நிலையத்தில் குவிந்து புகார்களை சொன்னார்கள். தொடர்ந்து நடந்த விசாரணையின் அடிப்படையில் தபால்காரர் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications