சன் குழும வழக்கு முடியும் வரை எப்.எம். ஏலத்தை தள்ளிவைக்க கோரி ரேடியோ மிர்ச்சி மனு
சென்னை: சன் குழும வழக்கு முடியும் வரை எப்.எம். ரேடியோக்களுக்கான ஏலத்தை ஒத்திவைக்கக் கோரி ரேடியோ மிர்ச்சி எப்.எம். நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.
எப்.எம் ரேடியோக்களுக்கான ஏலத்தில் பங்கேற்க சன் குழுமத்துக்கு மத்திய அரசு அனுமதி மறுத்திருந்தது. இதற்கு எதிரான சன் குழுமம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

மேலும் அந்த உத்தரவில் ஏலத்தின் முடிவை வழக்கின் அடுத்த விசாரணையின்போது சீலிட்ட உறையில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும், ஏலத்தில் சன் குழுமம் பங்கேற்றாலும், இந்த இடைக்கால உத்தரவு வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டதாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சன் குழுமம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும், இந்த வழக்கின் இறுதி முடிவுக்குப் பிறகு ஏலத்தை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரி ரேடியோ மிர்ச்சி நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தல் நேற்று மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில் சன் குழுமம் இடைக்கால உத்தரவின் அடிப்படையில் ஏலத்தில் பங்கேற்று, ஒரு வேளை ஏலத்தில் வெற்றி பெறுகின்றனர் என்றாலும், வழக்கின் இறுதி முடிவில் அவர்களை நீதிமன்றம் நிராகரித்தால், சன் குழுமத்தினர் ஏலத்தை எடுக்க வேண்டியதில்லை. அதனால் பிற நிறுவனங்களுக்குத்தான் பாதிப்பு ஏற்படும்.
இது தவிர சன் குழுமத்தினர் ஏலத்தில் பங்கேற்று அதிக ஏலத்தொகை நிர்ணயிக்கப்பட்ட பிறகு, அவர்களை நீதிமன்றம் நிராகரித்தால் முன்னர் நடைபெற்ற ஏலத்தை ரத்து செய்து, பின்னர் நடைபெறும் புதிய ஏலத்தில் ஆரம்ப விலையும் அதிகரிக்கும். இதன் காரணமாகவும் எங்கள் நிறுவனத்துக்கு பாதிப்பு ஏற்படும்.
மேலும் தற்போது அனைத்து பண்பலை வானொலி நிலையங்களுக்கான உரிமமும் வரும் செப்டம்பரில்தான் முடிவடைகிறது. எனவே சன் குழுமம் சார்பில் தொடரப்பட்ட வழக்கின் இறுதிமுடிவு வரும் வரை ஏலத்தை தள்ளி வைக்க உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டது.
இந்த மனு நீதிபதி சத்யநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, நான் ஏற்கெனவே பிறப்பித்த இடைக்கால உத்தரவில் ஏலத்தில் அதிக தொகை நிர்ணயிக்கப்பட்டால் அது நாட்டின் நலனுக்குத்தான் நல்லது எனக் குறிப்பிட்டிருந்தேன். எனவே, ஏலத்தை தள்ளிவைக்க அரசுக்கு உத்தரவிடமுடியாது என்றார்.
இது குறித்து சன் குழுமம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 21-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்











Click it and Unblock the Notifications