இரவு நேர மின்தடை..புழுக்கத்தில் தவிக்கும் மக்கள்..மின்வாரியம் முற்றுகை..அம்பத்தூரில் சாலை மறியல்
சென்னை: இரவு நேர மின் வெட்டு காரணமாக பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில ஈடுபட்டதால் அம்பத்தூரில் பரபரப்பு ஏற்பட்டது. ஆவடி, பூந்தமல்லி, திருவேற்காடு, மதுரவாயல் போன்ற பல்வேறு பகுதிகளில் இரவு நேர மின்தடை ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கோடை வெப்பம் அதிகரித்துள்ள நிலையில் இரவு நேர மின்தடையால் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக கூறி பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
கோடை காலம் தொடங்கியதில் இருந்ததே தமிழ்நாட்டில் பல ஊர்களில் மின் தடை பிரச்சினை தலை தூக்க ஆரம்பித்து விட்டது. மதுரை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளிலும் விருதுநகர் மாவட்டத்தில் பல கிராமங்களிலும் மின் வெட்டு பிரச்சினையால் மக்கள் இரவு நேரங்களிலும் பகல் நேரங்களிலும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

சென்னைவாசிகளும் மின்வெட்டு பிரச்சினைக்கு தப்பவில்லை. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு நேர மின்தடை அதிகரித்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி, பூந்தமல்லி, திருவேற்காடு, மதுரவாயல் போன்ற பல்வேறு பகுதிகளில் இரவு நேர மின்தடை ஏற்படுகிறது என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டு.
தினசரியும் இரவு 10 மணி முதல் சில மணிநேரங்கள் மின்சாரம் தடைபடுவதாக சமூக வலைத்தளங்களில் குற்றம் சாட்டி புகார் அளித்துள்ளனர். முதல்வர் மு.க ஸ்டாலின் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் ட்வீட் செய்துள்ளனர்.

நேற்று இரவும் வழக்கம் போல மின்தடை ஏற்படவே அம்பத்தூரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை அதிகாரிகள் முற்றுகையிட்டனர். அம்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளான கள்ளிகுப்பம், மேனாம்பேடு, புதூர் பானுநகர், லெனின் நகர், ஒரகடம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை ஏற்பட்டதாக பொதுமக்கள் மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
புகாருக்கு உரிய நடவடிக்கை எடுக்காததால் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆத்திரமடைந்த பொதுமக்கள் கள்ளிகுப்பம் அருகே அம்பத்தூர் செங்குன்றம் பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்பத்தூர் காவல்நிலைய அதிகாரிகள் பொதுமக்களுடன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதை ஏற்க மறுத்த பொதுமக்கள், போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். படிப்படியாக தடைபட்ட மின்சாரம் வரத்தொடங்கியதை அடுத்து பொதுக்கள் கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications