கூலி உயர்வு கோரி விசைத்தறி தொழிலாளர்கள் திடீர் ஸ்டிரைக்
நெல்லை: நெல்லை அருகே கூலி உயர்வு கேட்டு விசைத்தறி தொழிலாளர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுட்டுள்ளதால் அங்கு விசைத்தறி தொழில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்று புற பகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஓருமுறை ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது ஊதிய ஓப்பந்த காலம் முடிவடைந்த நிலையில், புதிய ஓப்பந்தம் போடப்படவில்லை. புதிய ஊதிய உயர்வு ஓப்பந்தத்தில் 80 சதவீத உயர்வு அளிக்க வேண்டும். மேலும், அரசு விடுமுறை நாட்களில் ரூ.300 ஊதியம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து கடந்த மே மாதம் 26ம் தேதி ஒரு நாள் அடையாள ஆர்பாட்டம் நடத்தினர். ஆனால் நடவடிக்கை இல்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை திடீரென அவர்கள் ஆர்பாட்டத்தில் குதித்தனர். தொடர்ந்து சங்கரன்கோவில் லட்சுமிபுரம் இரண்டாவது தெருவில் திரண்ட அவர்கள், தாசில்தாரிடம் மனு அளிக்க ஊர்வலமாக புறப்பட்டனர். இதற்கு போலீசார் அனுமதி அளிக்க மறுத்ததால், முக்கிய நிர்வாகிகள் மட்டும் தாசில்தாரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.
இதுகுறித்து விசைத்தறி தொழிலாளர் சங்க தலைவர் ரத்தினவேலு கூறுகையில், விசைத்தறி தொழிலாளர்கள் நாள் ஒன்றுக்கு 18 மணி நேரம் வேலை செய்கிறோம். கடந்த காலத்தில் போடப்பட்ட ஓப்பந்தத்தின்படி நாள் ஓன்றுக்கு ரூ.230 முதல் ரூ.240 வரை கூலி வழங்கப்பட்டு வந்தது. விசைத்தறி தொழிலாளர் சட்டவிதிபடி மருத்துவ செலவு உள்பட எந்த சலுகையும் இதுவரை கிடைக்கவில்லை என்று கூறினார்.












Click it and Unblock the Notifications