சங்கரன்கோவில்: சாலைமறியலில் ஈடுபட்ட 200 விசைத்தறி தொழிலாளர்கள் கைது
சங்கரன்கோவில்: கோரிக்கைகளை வலியுறுத்தி விசைத்தறி தொழிலாளர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருவதால் 200க்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் விசைத்தறி கூடங்கள் ஏராளமாக இயங்கி வருகின்றனர். இங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 75 சதவீத ஊதிய உயர்வு, தேசிய விடுமுறை சம்பளமாக ரூ.300 ஆகியவை வழங்க வலியுறுத்தி கடந்த மார்ச் 10ம் தேதி முதல் விசைத்தறி தொழிலாளர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், தர்ணா, பட்டினி போராட்டம், சுடுகாட்டிக்கு சென்று மனு கொடுக்கும் போராட்டம் என பல்வேறு போராட்டங்களை நடத்தியும் இந்த பிரச்சனை தீர்ந்தப்பாடில்லை.
இந்த பிரச்சனை தொடர்பாக நெல்லை தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் 5 கட்ட பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இதில் இதுவரை எநத் வித உடன்பாடும் ஏற்படவில்லை. இந்நிலையில் நேற்று பேச்சு வார்த்தை நடைபெறுவதாக இருந்தது. ஆனால் உரிமையாளர்கள் யாரும் வராததால் அது கைவிடப்பட்டது.
இந்நிலையில் போராட்டத்தின் 39வது நாளான இன்று காலை தொழிலாளர்கள் ஊர்வலமாக புறப்பட்டு மெயின் ரோட்டுக்கு வந்தனர். விசைத்தறி தொழிற்சங்க தலைவர் ரத்தினவேலு, செயலாளர் மாடசாமி ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த சங்கரன்கோவில் டிஎஸ்பி கலிவரதன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பிரபாகரன், நவீன் மற்றும் போலீசார் விரைந்து அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இருப்பினும் அவர்கள் கலைந்து செல்லாததால் சாலை மறியலில் ஈடுபட்ட 51 பெண்கள் மற்றும் ஆண்கள் உள்பட 200க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
சாலை மறியல் காரணமாக அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தின் காரணமாக ஜவுளி உற்பத்தி பெருமளவு பாதிக்கப்பட்டு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications