அதிகரிக்கும் காற்றாலை மின் உற்பத்தி: மின் வாரியத்தினர் நிம்மதி
நெல்லை: தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்றால் காற்றாலை மின் உற்பத்தி வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் மின் வாரியத்தினர் நிம்மதி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் சுமார் 10 ஆயிரம் காற்றாலைகள் இயங்கி வருகின்றன. நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் காற்றாலைகள் அதிகளவில் உள்ளன. ஆண்டுதோறும் காற்றாலைகள் சுழன்றாலும் மே மாதம் முதல் செம்டம்பர் மாதம் வரை உள்ள காற்று சீசன் காலத்தில் மட்டுமே முழு உற்பத்தி அளவு எட்டப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள காற்றாலைகள் முழுமையாக சுழலும் போது அதிகபட்சமாக 7 ஆயிரத்து 500 மெகா வாட் மின் உற்பத்தி கிடைக்கும். கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவக்காற்று அதிகமாக வீசி வருகிறது. இதன் காரணமாக காற்றாலைகள் முழு வீச்சில் இயங்கி வருகின்றன. இதனால் மின் உற்பத்தி வேகமாக அதிகரித்து வருகிறது.
கடந்த ஒரு வார காலமாக மின் உற்பத்தி 3 ஆயிரம் மெகா வாட்டாக இருந்து வருகிறது. இன்று அதிகாலை மின் உற்பத்தி 3 ஆயிரத்து 500 மெகா வாட்டாக உயர்ந்துள்ளது. இது இந்த சீசனில் காற்றாலை மூலம் கிடைக்கும் அதிகபட்ச மின்சாரமாகும்.
காற்றாலை மின் உற்பத்தி அதிகமாக இருக்கும் போதிலும் தனியாரிடம் இருந்து கொள்முதல் செய்யும் மின்சாரத்தின் அளவு குறைக்கப்படவில்லை. இதனால் குறைந்த விலையில் கிடைக்கும் காற்றாலை மின்சாரத்தை அரசு முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், தமிழகத்தின் தேவைக்கு போக மீதமுள்ள மின்சாரத்தை அண்டை மாநிலங்களுக்கு கொடுக்கலாம் என்றும் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.