டிவி நடிகர் பிரதீப் குமார் தற்கொலைக்கு காரணம் பணப்பிரச்சினையா? ... கதறும் நண்பர்கள்
சீரியல் நடிகர் பிரதீப் குமார் தற்கொலை செய்து கொண்டதற்குக் காரணம் பணப்பிரச்சினை என்று சின்னத்திரை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை: சின்னத்திரை நடிகர், நடிகைகளின் தற்கொலை சமீபகாலமாகவே அதிகரித்து வருகிறது. சன்டிவி சீரியல்களில் நடித்து பிரபலமான பிரதீப் குமார் தற்கொலை செய்து கொண்டது சின்னத்திரை வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணமாகி சில மாதங்களில் தற்கொலை செய்து வாழ்க்கையை முடித்துக்கொண்டுள்ளார் பிரதீப். இவரது இந்த முடிவுக்குக் காரணம் பணப்பிரச்சினை என்று கூறப்படுகிறது.
ஜெமினி டிவியில் பணியில் தொடங்கிய பிரதீப், தெலுங்கு டிவி சீரியல்களில் நடித்து வந்தார். தமிழில் பாசமலர்கள் சீரியலில் நடித்த அவர் தன்னுடன் நடித்த பவானியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
சன் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் சுமங்கலி டிவி சீரியலில் ஹீரோவாக நடித்து வரும் அவர், இன்று அதிகாலை 4 மணிக்கு, ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தின் புப்பலகுடா பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டில் பிரதீப் தூக்கு போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
அவரது தற்கொலைக்கான காரணம், குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகளே என்று சொல்லப்பட்டாலும் பொருளாதாரரீதியான பிரச்சினை என்று தெரியவந்துள்ளது.
புதிதாக திருமணமான பிரதீப் தற்கொலை செய்து கொண்டது சின்னத்திரை வட்டாரங்களில் அதிர்ச்சியலைகளை உருவாக்கியுள்ளது.
பிரதீப் - பவானி
தெலுங்கு சின்னத்திரை உலகில் பிரதீப் - பவானி ஜோடி பிரபலம். அந்த பிரபல ஜோடியை சன்டிவியில் பாசமலர்கள் சீரியலில் அறிமுகம் செய்தனர். தெலுங்கில் பல சீரியல்களில் இணைந்து நடித்தவர்கள் வாழ்க்கையிலும் இணைந்தனர்.
ஆடம்பர வாழ்க்கை
டிவி சீரியல்களில் நடிக்கும் நட்சத்திரங்கள் சமீப காலங்களில் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்கின்றனர். சீரியல் வருமானம் என்பது நிரந்தரமானதல்ல என்று தெரிந்துமே அகல கால் வைக்கின்றனர் என்று பிரபல நடிகர் போஸ் வெங்கட் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய போது கூறினார். பொருளாதார ரீதியாக பாதிப்பு ஏற்படும் போது மனதளவில் உடைந்து போகின்றனர்.
சின்னத்திரை பிரபலம்
சின்னத்திரையில் நடிப்பவர்கள், நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்கள் தாங்கள் பிரபலமானவர்கள் என்பதை அடையாளப்படுத்திக்கொள்ள நினைக்கின்றனர்.
பொது இடங்களில் பொதுமக்கள் தங்களைப் பற்றி விசாரிக்க வேண்டும் என்று நினைக்க வேண்டும் என்பது சின்னத்திரை நட்சத்திரங்களின் விருப்பமாக உள்ளது. சில எபிசோடுகளில் தலை காட்டாமல் விட்டாலே பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
சந்திக்க தயாராகுங்க
சீரியலில் நடிக்கும் போதே சினிமா ஆசை ஏற்படுகிறது. ஒரு படத்தோடு வாய்ப்பு கிடைக்காவிட்டால் சீரியல் பக்கம் திரும்ப ஈகோ தடுக்கிறது. ஆனால் அவ்வாறு யோசிக்காமல் சீரியல், நிகழ்ச்சி தொகுப்பு என சின்னத்திரை போராட வேண்டும், சினிமா வாய்ப்பு வரும் போது பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதும் அனுபவம் வாய்ந்த நடிகர் போஸ் வெங்கட்டின் அறிவுரையாகும்.
உதிரும் நட்சத்திரங்கள்
சின்னத்திரையில் நடித்து சினிமா சென்று ஜெயிக்க முடியாமல் போய் மீண்டும் சின்னத்திரைக்கே திரும்பிய பல நட்சத்திரங்கள் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர். அழகான மனைவி, அன்பான குடும்பம் என்று வாழ்க்கையை தொடங்கிய பிரதீப்பின் வாழ்க்கை இத்தனை சீக்கிரம் முடிந்து போனதே என்று அவருடன் பணி செய்து வரும் நண்பர்கள் கண்ணீர் மல்க கூறியுள்ளனர்.