கும்பகோணம்: பிரசவத்திற்கு கிளம்பிய கர்ப்பிணி பெண் பாம்பு கடித்து பலி-வயிற்றில் இருந்த சிசுவும் மரணம்
கும்பகோணம் அருகே பிரசவத்துக்கு புறப்பட்ட கர்ப்பிணி பெண் பாம்பு கடித்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம்: இன்று குழந்தை பிறக்க வேண்டிய நிலையில், பிரசவத்துக்கு புறப்பட்ட கர்ப்பிணி பெண் பாம்பு கடித்து மரணமடைந்த சம்பவம் உறவினர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உயிரிழந்த பெண்ணின் பெயர் தனலட்சுமி என்பதாகும். 34 வயதாகிறது. கும்பகோணத்தை அடுத்த இனாம்கிளியூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மனைவியாவார். இவர் பூ மாலை வியாபாரம் செய்து வருகிறார். இந்த தம்பதியருக்கு மணிகண்டன் என்ற 6ஆம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளான்.
இந்த நிலையில் தனலெட்சுமி 2வது முறையாக கர்ப்பமாக இருந்தார். அவருக்கு மார்ச் 24ஆம் தேதியன்று குழந்தை பிறக்கும் என்று டாக்டர்கள் தேதி குறித்திருந்தனர். இதனையடுத்து கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு செல்ல நேற்றிரவு தயாராக இருந்தார்.
தனலட்சுமி மகன் மணிகண்டனை அழைத்து கொண்டு வீட்டின் பின்புறம் சென்றார். அங்கு தனலெட்சுமியை ஒரு பாம்பு கடித்தது. இதனால் வலிதாங்க முடியாமல் தனலெட்சுமி அலறியதை கண்ட அலறிய உறவினர்கள் அவரை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு தனலெட்சுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர். மேலும் அவரது வயிற்றில் இருந்த சிசுவும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை கேட்டதும் கணவர் கிருஷ்ணன் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
இன்று குழந்தை பிறக்க வேண்டிய நிலையில் தாய் மற்றும் வயிற்றில் இருந்த சிசு இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து கும்பகோணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.