சீக்கிரமே தேர்தல் வரும்.. அது எப்படி பிரேமலதா இவ்வளவு உறுதியாகச் சொல்கிறார்?
சென்னை: தமிழகத்தில் விரைவிலேயே பொதுத் தேர்தல் வரப் போகிறது என்று அடித்துக் கூறியுள்ளார் தேமுதிகவின் பிரேமலதா விஜயகாந்த். இது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதுவும் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாகவே, ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்கு முன்பாகவே பொதுத் தேர்தல் வரப் போவதாக அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளதால், யாரேனும் அவருக்கு எதையேனும் முன்கூட்டியே ரகசியமாக கூறி விட்டார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மேலும் தேமுதிகவின் புதிய கூட்டணி தொடர்பான கிசுகிசுக்கள், ரகசியங்களும் கூட வலுவடைந்து வருவதாகவும் ஒரு பேச்சு எழுந்துள்ளது.
ஜெயலலிதா இல்லாத தமிழகம்
ஜெயலலிதா காலத்திலேயே, கடந்த சட்டசபைத் தேர்தலில் தேமுதிகவை தூக்கி தூரப் போட்டு விட்டது அதிமுக. ஒரு இடத்தில் கூட டெபாசிட் வாங்க முடியாமல் படு தோல்வி அடைந்து பரிதாபமாக மாறிப் போனது தேமுதிக. இப்போது ஜெயலலிதா இல்லாத தமிழகத்தில் தேமுதிக தனது மறு வாழ்வுக்காக காத்திருக்கிறது.
மறு வாழ்வு கிடைக்குமா?
தேமுதிகவுக்கு எதிர்காலம் எப்படி இருக்கிறது என்பது தெரியவில்லை. அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் முன்பு போல இல்லை. விஜயகாந்த்தால் தொடங்கப்பட்ட கட்சிக்கு, அவரை முன்னிறுத்தி எதையும் செய்ய முடியாத நிலையில் உள்ளது தேமுதிக.
புதிய திட்டங்கள்
இந்த நிலையில்தான் பிரேமலதாவை முன்னிறுத்தி வரும் காலத்தில் அரசியல் செய்யும் திட்டத்தில் தேமுதிக இருப்பதாக ஒரு ரகசியத் தகவல் ரொம்ப காலமாகவே சுற்றி வருகிறது. மேலும் வரும் லோக்சபா தேர்தலையும், சட்டசபைத் தேர்தலையும் பாஜகவுடன் கூட்டணி வைத்து தேமுதிக சந்திக்கும் என்றும் கூறப்படுகிறது.
தைரியப் பேச்சு
சமீப காலமாக பிரேமலதா பேசி வரும் பேச்சுக்களைக் கவனித்தால் இதை எளிதாக ஊகிக்க முடியும். கிட்டத்தட்ட இன்னொரு தமிழிசை போலவே அவர் பாஜகவுக்கு வக்காலத்து வாங்கிப் பேசி வருகிறார். பாஜக அரசையும் பாராட்டி வருகிறார். எனவே பாஜகவுடனான கூட்டணியை அவர்கள் முன்பே முடிவு செய்து விட்டார்களோ என்ற கேள்வியும் உள்ளது.
தேர்தல் குறித்து உறுதிப் பேச்சு
இந்த நிலையில் நேற்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், தமிழகத்தில் உள்ளாட்சி, இடைத்தேர்தலுக்கு முன் விரைவில் பொதுத்தேர்தல் வர உள்ளது என்று அடித்துக் கூறினார். இதுபோல அவர் பேசுவது முதல் முறையல்ல என்பதால் இது முக்கியத்துவம் பெறுகிறது.
யாராவது சொல்லியிருப்பார்களோ!
விரைவில் தேர்தல் வரப் போகுது, ரெடியாகுங்க என்று யாரேனும் பிரேமலதாவுக்கு சொல்லியிருப்பார்களோ என்ற கேள்வி எழாமல் இல்லை. அது எப்படி இப்படிக் குறிப்பிட்டு தெளிவாக அறுதியிட்டு பிரேமலதா சொல்ல முடியும் என்பதும் கேள்விக்குறியதாக மாறியுள்ளது.
என்னவோ நடக்கப் போகுது.. என்னென்னவோ நடந்துக்கிட்டு இருக்கு..!