அண்ணியாக, அன்னையாக இருந்த பிரேமலதா சித்தியாக மாறிவிட்டார்: வேலூர் விஸ்வநாதன்
சென்னை: அண்ணியாக, அன்னையாக இருந்த பிரேமலதா சித்தியாக மாறியதால் மக்கள் தேமுதிக என்ற புதிய கட்சியை துவங்கியுள்ளதாக தேமுதிகவில் இருந்து நீக்கப்பட்ட வேலூர் மாவட்ட செயலாளர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
தேமுதிகவில் இருந்து நீக்கப்பட்ட சந்திரகுமார் எம்.எல்.ஏ. தலைமையில் போட்டி பொதுக்குழு கூட்டம் சென்னை தி. நகரில் உள்ள ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது. கூட்டத்தில் சேலம், ஈரோடு, வேலூர் உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த தேமுதிகவினர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தை அடுத்து மக்கள் தேமுதிக என்ற புதிய கட்சி துவங்கப்பட்டுள்ளதாகவும், அதிமுக ஆட்சியை அகற்ற இந்த கட்சி பாடுபடும் என்றும் சந்திரகுமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட வேலூர் மாவட்ட செயலாளர் விஸ்வநாதன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
அண்ணியாக, அன்னையாக இருந்த பிரேமலதா சித்தியாக மாறிவிட்டார். அதனால் தான் மக்கள் தேமுதிக கட்சி துவங்கப்பட்டுள்ளது. தேமுதிக பிரேமலதாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவர் எங்கள் தலைகளை அடமானம் வைத்து பெரிய தொகையை வாங்கிவிட்டார்.
அவர் எங்களின் கனவுக் கோட்டையை தகர்த்துவிட்டார். நாங்கள் கட்சிக்கு துரோகம் செய்தோமா இல்லையே. கூட்டணி குறித்து தானே கேட்டோம். இத்தனை நாட்களாக மனக்கஷ்டத்தோடு இருந்தோம். பல நாட்கள் தூக்கமின்றி தவித்தோம் என்றார்.