மண்ணை கவ்விய கேப்டன்.. ரஜினி பட வசனத்தை பேசும் பிரேமலதா
காரைக்குடி: சட்டசபை தேர்தலில் முள்பாதை, மலர் பாதை என இரண்டு பாதை கேப்டன் முன்பு வைக்கப்பட்டது. எடுத்து கொண்ட பாதை முள்பாதை. முள்பாதையில் நடப்பவர் வெற்றி பெறுவார் என்பது வரலாறு என்று தேமுதிக மகளிரணி தலைவி பிரேமலதா கூறியுள்ளார்.
கடவுள் நல்லவர்களுக்கு சோதனை தருவார். ஆனால் கைவிட மாட்டார். கெட்டவர்களுக்கு அள்ளி அள்ளி கொடுப்பார். கைவிட்டு விடுவார் என்றும் ரஜினி நடித்த பாட்சா பட வசனத்தை பேசியுள்ளார் பிரேமலதா
சட்டசபை தேர்தல் தோல்விக்குப் பின்னர் காரைக்குடியில் நடைபெற்ற தேமுதிக நிர்வாகி இல்ல திருமண விழாவில் விஜயகாந்த், பிரேமலதா தம்பதி சமேதராக பங்கேற்றனர்.
திருமண நிகழ்ச்சியில் மணமக்களை வாழ்த்தி பேசிய பிரேமலதா, பின்னர் அரசியல் பக்கம் திரும்பினார். தே.மு.தி.க.வை பொறுத்தவரை இந்த தேர்தலில் வெற்றி பெறவில்லை, சோர்வடைந்து விட்டனர் என்கின்றனர். அது கிடையாது.
எழுந்து அடிப்பார்
விஜயகாந்த் சினிமா வாழ்க்கையை எடுத்து கொண்டால், ஒரு ஹீரோவாக வில்லன் அடிக்க, அடிக்க விழுந்து கொண்டே இருப்பார். மறுபடியும் மீண்டும் எழுந்து நின்று திரும்ப விளாசுவார்.
விஜயகாந்த் எதிர்நீச்சல்
கேப்டன் எப்போதும் எதிர்நீச்சல் போட்டுத்தான் வாழ்க்கையை சந்தித்துள்ளார். சட்டசபை தேர்தல் தோல்வியினால் மனது வருத்தப்படவோ, தொய்வடையவோ ஏதும் இல்லை.
நல்லதை நினைத்தோம்
நாம் பல மடங்கு தைரியத்தோடு எதிர்நீச்சல் போட வேண்டும். இந்த தேர்தலில் கேப்டனை நோக்கியே கழகங்கள் இருந்தன. தே.மு.தி.க. எடுத்த முடிவு தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் நல்லதை நினைத்து எடுத்த முடிவு.
முள்பாதை
விரைவில் மக்கள் நம் பக்கம் திரும்புவர். முள்பாதை, மலர் பாதை என இரண்டு பாதை கேப்டன் முன்பு வைக்கப்பட்டது. எடுத்து கொண்ட பாதை முள்பாதை. முள்பாதையில் நடப்பவர் வெற்றி பெறுவார் என்பது வரலாறு.
கடவுள் கைவிட மாட்டார்
நாம் எடுத்த முடிவு தைரியமானது. ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க எடுத்த முடிவு. கடவுள் நல்லவர்களுக்கு சோதனை தருவார். ஆனால் கைவிட மாட்டார். கெட்டவர்களுக்கு அள்ளி அள்ளி கொடுப்பார். கைவிட்டு விடுவார். தேமுதிகவை பொறுத்தவரை எடுத்த பயணத்தில் உறுதியாக இருப்போம் என்றார் பிரேமலதா.
ரஜினி ரசிகர்கள்
தேர்தல் பிரச்சாரத்தின் போது ரஜினி பற்றி பேசப்போய் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார் விஜயகாந்த். தேர்தல் தோல்விக்குப் பின்னர் பாட்சா படத்தில் ரஜினிகாந்த் பேசிய வசனத்தை பேசி தேமுதிகவினருக்கு ஆறுதல் கூறியுள்ளார் பிரேமலதா.