ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நீங்களே போட்டியிடுங்க.. பிரேமலதாவை அதிர்ச்சியடைய வைத்த நிர்வாகிகள்!
ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தலில் தேமுதிக வேட்பாளராக போட்டியிட வேண்டும் என அக்கட்சி நிர்வாகிகள் கோரிக்கையை பிரேமலதா நிராகரித்ததால் மதிவாணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக வேட்பாளராக பிரேமலதா போட்டியிட வேண்டும் என அக்கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தினர். ஆனால் இதை பிரேமலதா நிராகரித்துவிட்டதால் வடசென்னை மாவட்ட செயலாளர் மதிவாணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த மாதம் 12-ந் தேதி நடைபெறும் இத்தேர்தலில் பல கட்சிகளும் களமிறங்குகின்றன.
இத்தொகுதியில் போட்டியிடப் போவதாக எம்ஜிஆர்-அம்மா-தீபா பேரவை பொதுச்செயலர் தீபா அறிவித்துள்ளார். திமுகவில் கடந்த முறை போட்டியிட்ட சிம்லா முத்துசோழன் உள்ளிட்டோர் விருப்ப மனு கொடுத்துள்ளனர்.

திலகவதி, நடிகை லதா
ஓபிஎஸ் அதிமுகவில் மாஜி டிஜிபி திலகவதி, டாக்டர் அழகு தமிழ்ச் செல்வி, ஜேசிடி பிரபாகரன் ஆகியோரது பெயர்கள் அடிபடுகின்றன. அதேபோல் நடிகை லதாவை நிறுத்தவும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழிசை சவுந்தரராஜன்
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜனும் ஆர்.கே. நகரில் போட்டியிடலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் தொடர்பாக தேமுதிக நிர்வாகிகளுடன் அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் நேற்று ஆலோசனை நடத்தினார்.

பிரேமலதா
இந்த ஆலோசனையின் போது வடசென்னை நிர்வாகி ஒருவரை வேட்பாளராக நிறுத்தலாம் என விஜயகாந்த் கூறியுள்ளார். ஆனால் தேமுதிக நிர்வாகிகளோ, ஆர்.கே.நகரில் பிரேமலதா போட்டியிட்டால் எளிதாக வென்றுவிடலாம்; அதிமுக வாக்குகள் பிரிவதால் தாங்கள் எளிதாக வெல்வோம் என திமுக கருதுகிறது. அப்படி வாக்குகள் பிரியும் நிலையில் நாம் போட்டியிட்டால் வெல்லலாம்.. அதனால் பிரேமல்தாவையே வேட்பாளராக நிறுத்தலாம் என வலியுறுத்தினர்.

நிராகரிப்பு
இதை கேட்ட பிரேமலதா அதிர்ச்சியடைந்தாராம். ஏற்கனவே விஜயகாந்த் தோல்வி அடைந்த நிலையில் தாமும் போட்டியிட்டு தோற்க வேண்டும் என நினைக்கிறார்களோ என அதிர்ந்து போய் கோரிக்கையை நிராகரித்துவிட்டாராம். இதனையடுத்தே வடசென்னை மாவட்ட செயலாளர் மதிவாணனை வேட்பாளராக விஜயகாந்த் இன்று அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications