234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவிக்க தயாரா? ஜெ.வுக்கு பிரேமலதா விஜயகாந்த் சவால்
காஞ்சிபுரம்: கூட்டணி பற்றி விஜயகாந்த் அறிவிப்பதற்கு முன்பு தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவிக்க ஜெயலலிதா தயார என தேமுதிக மகளிரணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த் சவால் விடுத்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேடல் என்ற பகுதியில் தேமுதிகவின் தமிழக அரசியலின் திருப்புமுனை மாநாடு இன்று மாலை 3 மணிக்கு நடைபெற உள்ளது. இதையொட்டி மாநாட்டு பணிகளை பிரேமலதா விஜயகாந்த் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், அதிமுக அரசு தமிழகத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும். இங்கு அனைத்துத் துறைகளிலும் ஊழல் மலிந்துள்ளது. ஊழலை ஒழிப்பது தேமுதிகவின் லட்சியமாகும்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறும் தேமுதிகவின் மாநாடு தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும். தமிழகத்தில் நல்லாட்சியை ஏற்படுத்தும் முயற்சியாக இந்த மாநாடு நடைபெறுகிறது.
தமிழக அரசு முதியோருக்கு இலவசப் பேருந்து பயண அட்டையை வழங்குவதாக அறிவித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக முதியோர் மீது இல்லாத அக்கறை தற்போது வந்துள்ளது நகைப்புக்குரியதாகும். தமிழக அரசு 110 விதியின் கீழ் அறிவிக்கும் திட்டங்கள் வெற்று அறிவிப்புகளாகவே உள்ளன. அவற்றில் பல செயல்படுத்தப்படவில்லை. தற்போதைய அரசு தமிழக மக்களை 5 லட்சம் கோடி ரூபாய்க்கு கடனாளியாக ஆக்கியுள்ளது.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்கு தேமுதிகதான் காரணம். இம்முறை அதிமுகவின் வெற்றிக்கு தேமுதிக முற்றுப்புள்ளி வைக்கும். நல்ல முடிவே இந்த மாநாட்டில் விஜயகாந்த் அறிவிப்பார். கூட்டணி பற்றி விஜயகாந்த் அறிவிப்பதற்கு முன்பு 2011ம் ஆண்டு தேர்தலில் வேட்பாளர்களை முன் கூட்டியே அறிவித்தது போல் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் அறிவிக்க ஜெயலலிதாவுக்கு தைரியம் இருக்கிறதா என சவால் விடுவதாகவும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications