அடுத்த சக்கரத்தில் தேமுதிக உட்காரும்.. ஜெயலலிதா போல் குட்டி ஸ்டோரி சொன்ன பிரேமலதா விஜயகாந்த்!
அடுத்த சக்கரத்தில் தேமுதிக உட்காரும். குட்டி ஸ்டோரி மூலம் விளக்கிய பிரேமலதா
ராணிப்பேட்டை: அடுத்த சக்கரத்தில் தேமுதிக உட்காரும் என கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிபாக்கத்தை அடுத்த திருப்பாற்கடல் பகுதியில் அமைந்துள்ளது பிரசன்ன வெங்கடேஸ்வர பெருமாள் ஆலயம். இங்கு தனது பிறந்தநாளையொட்டி தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சுவாமி தரிசனம் செய்தார்.
இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் உள்ளாட்சி தேர்தல் மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்களில் வாக்கு விதிகம் என்பது நாம் தமிழர் கட்சியை விட குறைந்துள்ளதே என கேள்வி எழுப்பப்பட்டது.

பிரேமலதா
அதற்கு பிரேமலதா சக்கரத்தாழ்வாரை இன்றுதான் தரிசனம் செய்துவிட்டு வந்துள்ளேன். சக்கரம் சுழன்று கொண்டுதான் உள்ளது. அடுத்த சக்கரத்தில் தேமுதிக உட்காரும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழுவதும் சீர்குலைந்துவிட்டது. பெண்கள் கூட போதை பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர். தெருவுக்கு 4 ஒயின்ஷாப்புகள் உள்ளன.

24 மணி நேரம்
24 மணி நேரமும் மது கிடைப்பதால் சட்டம் ஒழுங்கு பெரிதளவில் பாதிப்புகளுக்கு சீர்குலைந்து போகிறது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்க போவதாக மூத்த அமைச்சர்கள் கூறி வருகிறார்கள். அரசியல் பிரமுகர்கள் அனைவரும் பேசுகிறார்கள். தனது குடும்பத்திலிருந்து எந்த வாரிசும் அரசியலுக்கு வரமாட்டார்கள் என முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார். ஆனால் தற்போது அவர்தான் தன் மகனை துணை முதல்வராக்க ஆசைப்படுகிறார். இதற்கு நான் என்ன சொல்வது மக்கள்தான் முடிவு சொல்ல வேண்டும் என தெரிவித்தார்.

ஈரோடு இடைத்தேர்தல்
ஈரோடு இடைத்தேர்தலில் தேமுதிகவுக்கு குறைந்த அளவு வாக்கு சதவீதம் என்ற கருத்தே தவறு. வாக்காளர்களுக்கு பணத்தை வாரி வழங்கி வெற்றி பெற்றது எல்லாம் ஒரு வெற்றியா? தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம். இந்த வெற்றியின் மூலம் வாக்கு சதவீதத்தை நிர்ணயிக்க முடியாது. கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரும் தேர்தலில் வெற்றி, தோல்வியை சந்தித்தவர்கள் தான். வரும் தேர்தலில் தேமுதிக தங்களது முழு பலத்தை வெளிப்படுத்தும் என்றார்.

ராஜினாமா
அது போல் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என அண்ணாமலை கூறியுள்ளது குறித்து பிரேமலதாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பிரேமலதா கூறுகையில், யாருமே கட்சி ஆரம்பிப்பது அவர் அவர்களுடைய கட்சியின் வளர்ச்சிக்காகத்தான். ஒவ்வொருவருடைய நிலைப்பாடு ஒவ்வொரு மாதிரி இருக்கும். அவர் எந்த நோக்கத்திற்காக அப்படிச் சொன்னார் என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும்.

50 ஆயிரம் பேர்
கட்சி ஆரம்பிப்பதே ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில்தான். அவருடைய கட்சியின் வளர்ச்சிக்கு அவர் சொல்லி இருக்கலாம். அந்த கருத்துக்கான விளக்கத்தை அவரிடம் நீங்கள் (நிருபர்கள்) கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்றார். மேலும் தமிழகத்தில் நடந்த பிளஸ் 2 தேர்விற்கு நிறைய மாணவர்கள் வராதது குறித்த கேள்விக்கு அவர் கூறுகையில் தமிழ்நாட்டில் தமிழ் பாடத்திற்கான தேர்வில் 50 ஆயிரம் பேர் வரவில்லை என்பது ஒட்டுமொத்த தமிழகத்திற்கான தலைகுனிவு. வரும் காலங்களில் அரசும், அமைச்சர்களும் அதை நிச்சயமாக ஆய்வு செய்து ஏன் வரவில்லை 50 ஆயிரம் மாணவர்கள் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். நாட்டின் எதிர்காலமே மாணவர்கள் தான் எனவே நிச்சயமாக இனி வரும் காலங்களில் இப்படி இருக்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications