ஆரோவில் பொன்விழாவில் கலந்துகொள்ள புதுவை வந்துள்ள பிரதமர் மோடிக்கு பலத்த பாதுகாப்பு
ஆரோவில் பொன்விழாவில் கலந்துகொள்ள பிரதமர் மோடி வருகை
புதுச்சேரி : ஆரோவில் சர்வதேச நகரத்தின் பொன்விழா ஆண்டிற்கு கலந்துகொள்வதற்காக புதுவை வந்துள்ள பிரதமர் மோடி, அங்குள்ள அரவிந்தர் ஆசிரமத்தில் சிறிது நேரம் தியானம் மேற்கொண்டார்.
புதுச்சேரி அருகே விழுப்புரம் மாவட்ட எல்லைப்பகுதியில் ஆரோவில் சர்வதேச நகரம் அமைந்துள்ளது. வெளிநாட்டினர் அதிகம் வசித்து வரும் ஆரோவில் நகரம் உருவாகி ஐம்பது ஆண்டுகள் ஆகிறது.
இங்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினர் 200க்கும் மேற்பட்டோர் குடும்பமாக வசித்து வருகின்றனர். ஆரோவில் நிர்வாகம் சார்பில் இந்த நகரத்தின் பொன்விழா இன்று கொண்டாடப்படுகிறது.
இந்த விழாவில் கலந்து கொள்வதற்காகப் பிரதமர் மோடி இன்று காலை 9.30 மணியளவில் சென்னையில் இருந்து புறப்பட்டு விமானம் மூலம் காலை 10.30 மணியளவில் புதுவை வந்தடைந்தார்.
அங்கிருந்து, கார் மூலம் அரவிந்தர் ஆசிரமத்துக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி அங்கு அரவிந்தர், அன்னை மீரா ஆகியோரின் சமாதிகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இதனையடுத்து, சிறிது நேரம் அங்குள்ள அரவிந்தர் சமாதிக்கு முன் அமர்ந்து தியானம் செய்தார். பின்னர் அங்கிருந்த பள்ளிக்குழந்தைகளுடன் சிறிது நேரம் உரையாடிவிட்டு ஆரோவில் புறப்பட்டுச்சென்றார்.
ஆரோவிலில் உள்ள பாரத் நிவாஸ் கருத்தரங்க கூடத்தில் நடைபெறும் பொன்விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடியோடு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி, புதுச்சேரி முதல்வர் நாராயண சாமி ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.
பிரதமரின் வருகையையொட்டி அப்பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. போலீஸாருடன் 4 கம்பெனி துணை ராணுவ படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.