பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கோவை வந்தார் மோடி.. எடப்பாடியார் வரவேற்பு
கோவை: கோவை விமான நிலையம் வந்த பிரதமர் மோடிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கோவை அருகேயுள்ள ஈஷா யோக மைய மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்க மோடி இன்று மாலை 5.45 மணியளவில் கோவை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் ஆளுநர் வித்யாசாகர் ராவ் வரவேற்பளித்தார். அதேபோல முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் வரவேற்பளித்தார். மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் வரவேற்பளித்தார்.

இந்நிலையில் தமிழக- கேரள எல்லையில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள பகுதியில் நிகழ்ச்சி நடைபெறவுள்ளதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வறட்சி காரணமாக தற்கொலை செய்து கொண்ட தமிழக விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது, யானைகள் உலவும் இடத்தில் ஈஷா யோகா மையத்தால் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கோயில் திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வது, 200-க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட போது தமிழகம் வராத பிரதமர், தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது உள்ளிட்டவைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய சங்கத்தினர், தந்தை பெரியார் கழகத்தினர் கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மேலும் விமான நிலையம் வரும் பிரதமர் விழா நடைபெறும் இடத்தில் சாலை மார்க்கமாக செல்லமாட்டார் என்பதை தெரிந்த போராட்டக்காரர்கள் கருப்பு நிற பலூன்களை பறக்க விட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications