கோவை சிறையில் துன்புறுத்தல்.. நீதிமன்ற வளாகத்தில் சட்டையை கழற்றி கைதி தர்ணா.. பரபரப்பு!
சிறையில் துன்புறுத்தப்படுவதாக நீதிமன்ற வளாகத்தில் கைதி ஒருவர் சட்டையை கழற்றி முழக்கமிட்டார்.
கோவை: சிறையில்துன்புறுத்தப்படுவதாக நீதிமன்ற வளாகத்தில் கைதி ஒருவர் சட்டையை கழற்றி முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை காந்திமா நகரை சேர்ந்த சஞ்சை ராஜா 26, கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று கோவை மத்திய சிறையில் உள்ளார்.

இந்நிலையில் அடிதடி வழக்கில் தொடர்புடைய அவரை 6-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த போலீசார் அழைத்து சென்றனர். அப்போது நீதிபதியிடம் சில கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அளித்தார். பின்னர் மீண்டும் அவரை சிறையிலடைப்பதற்காக அழைத்து வந்து கொண்டிருந்தனர். அப்போது நீதிமன்ற வளாகத்திலேயே கைதி திடீரென்று பரபரப்பை ஏற்படுத்தினார்.
முன்பகை காரணமாக கடந்த ஒரு மாதமாக சிறை காவல் கண்காணிப்பாளர் தனிமை சிறையில் அடைத்து நிர்வாணப்படுத்தி துன்புறுத்துவதாகவும், மருத்துவ வசதி தேவை எனவும், சிறை மாற்ற வேண்டும் என்றும் கோரியும், நீதிமன்ற வளாகத்திலேயே சட்டையை கழற்றி முழக்கமிட்டார்.
பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணாவிலும் ஈடுபட்டார். ஆனால் அவரை தடுத்து நிறுத்திய பாதுகாப்பு போலீசார், கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என உறுதி அளித்து சமாதானம் செய்து சிறைக்கு அழைத்து சென்றனர்.












Click it and Unblock the Notifications