சிறுநீரக தானம் செய்த கைதி சிறையில் மரணம்…..
சேலம்: சேலத்தில் விசாரணைக் கைதி சிறையில் மரணமடைந்துள்ள நிகழ்ச்சி பதற்றத்தைக் கிளப்பியுள்ளது.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகேயுள்ள கொக்கராயன்பேட்டை, அம்மாசிபாளையத்தைச் சேர்ந்தவர் ராஜவேல். பள்ளிபாளையம் பகுதியில் மாதேஸ்வரன் என்பவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக கைது செய்யப்பட்ட இவர் கடந்த வருடம் ஏப்ரல் அன்று சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சேலம் மத்திய சிறையின் 7-ஆவது தொகுதியில் உள்ள சிறை அறையில் 4 கைதிகளுடன் சேர்த்து ராஜவேல் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், வியாழக்கிழமை காலை இதர கைதிகள் எழுந்து வெளியே வந்த பிறகும் ராஜவேலு வரவில்லை. இதுகுறித்து சிறை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மருத்துவர்களின் பரிசோதனையில் ராஜவேலு உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவரது உடல் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர் எவ்வாறு உயிரிழந்தார் என்பது குறித்து அஸ்தம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சிறைக் கைதி உயிரிழந்திருப்பது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெறுகிறது. உயிரிழந்த ராஜவேல், தனது ஒரு சிறுநீரகத்தை தானம் வழங்கியவர் என்றும், அவருக்கு அடிக்கடி உடல் நலக் குறைவு ஏற்படுவது வழக்கம் என்றும் சிறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.