சூப்பர்வைசர் பணியில் சேர நீதிபதிக்கே அழைப்பு கடிதம்... வாலண்டியராக சிக்கிய போலி நிறுவனங்கள்!
சூப்பர்வைசர் பணியில் சேர சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதனுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பிய போலி நிறுவனங்கள் சிக்கிக் கொண்டுள்ளன.
சென்னை : சூப்பர்வைசர் பணிக்கான நேர்காணலில் பங்கேற்க முன்தொகை அனுப்பக் கோரி நீதிபதிக்கே அழைப்புக் கடிதம் அனுப்பிய தனியார் நிறுவனங்கள் பிரச்னையில் சிக்கிக் கொண்டுள்ளன.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதனுக்கு உடனடி வேலைவாய்ப்பு என்று கூறி நிரந்த முகவரி கூட இல்லாத 5 தனியார் மனிதவள நிறுவனங்கள் கடிதம் அனுப்பியுள்ளனர். அக்டோபர் 1ம் தேதி முதல் 3ம் தேதிக்குள் நேர்காணலுக்கு வருமாறும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்துள்ளது.
நீதிபதி வைத்தியநாதன் இந்த விவகாரத்தை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கவனத்துக்கு கொண்டு சென்றார். இதனையடுத்து வழக்கு விடுமுறை நாளான நேற்றே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

எப்படி முகவரி கிடைத்தது?
இந்த வழக்கை நீதிபதிகள் கிருபாகரன், வைத்தியநாதன் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதியின் வில்லிவாக்கம் முகவரி எப்படி தனியார் நிறுவனங்களுக்கு கிடைத்தன என்று கேள்வி எழுப்பினர். மேலும் அழைப்புக் கடிதத்தில் உள்ள எண்கள் சம்பந்தப்பட்டவர்களுடையது அல்ல என்பது தெரியவந்துள்ளது.

எத்தனை பேரிடம் பணம் வசூலிப்பு?
அழைப்புக் கடிதம் அனுப்பியுள்ள 5 தனியார் நிறுவனங்களும் மோசடி நிறுவனங்கள் என்று தெரிய வந்துள்ளது. ஏனெனில் பணியாளர் தேர்வில் பங்கேற்க பதிவுக் கட்டணமாக முறையே ரூ. 250 முதல் ரூ. 750 வரை வரைவு காசோலையாக அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளன.

எத்தனை பேர் ஏமாந்துள்ளனர்?
இந்தத் தகவல்களைப் பார்க்கும் போது இவை போலியானவை என்பது தெரிய வருவதாக நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த போலி நிறுவனங்கள் இது வரை எத்தனை நபர்களுக்கு இது போன்று அழைப்பு கடிதங்களை அனுப்பியுள்ளன, எத்தனை நபர்கள் பங்கேற்றுளனர், அவர்களிடம் எவ்வளவு தொகை வசூலிக்கப்பட்டுள்ளது போன்ற விவரங்களை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

விசாரிக்க உத்தரவு
மேலும் மத்திய மாநில அரசுகளின் அதிகாரப்பூர்வ லட்சினை இவர்களுக்கு எப்படி கிடைத்தது என்றும் விசாரிக்குமாறு காவல்துறை மற்றும் தொழிலாளர் வேலைவாய்ப்புத் துறை அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மற்றும் 5 தனியார் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 13ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.

விசாரணை மாற்றம்
இதனிடையே போலி தனியார் நிறுவனங்கள் குறித்த விசாரணை தொடங்கியுள்ளது. இந்த வழக்கு விசாரணை காவல்துறையிடம் இருந்து மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications