டெங்கு கொசுக்கள் உருவாக காரணமாக இருக்கும் பள்ளிகள் அங்கீகாரம் ரத்து... சுகாதாரத் துறை வார்னிங்
டெங்கு கொசுக்கள் உருவாக காரணமாக இருக்கும் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை: தனியார் பள்ளிகள் டெங்கு கொசுக்களை உருவாக்கும் வகையில் இயங்கினால் அதன் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
டெங்கு என்னும் வைரஸ் நோய்க்கு தமிழகத்தில் ஏராளமானோர் பலியாகிவிட்டனர். மேலும் பாதிக்கப்பட்ட பலர் மருத்துவமனையே கதி என உள்ளனர். டெங்கு வைரஸ்களை ஏடீஸ் கொசுக்கள் பரப்பி வருகின்றன.
டெங்கு தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசும் டெங்கு புழுக்கள் உருவாக்கும் இடங்களை கண்டறிந்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

பெற்றோர் புகார்
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் டெங்கு கொசுக்கள் உற்பத்தி இருப்பதாக பொது சுகாதாரத் துறைக்கு பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில் பொது சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமி தலைமையிலான அதிகாரிகள் இன்று பள்ளியில் ஆய்வு நடத்தினர்.

ரூ.50 ஆயிரம் அபராதம்
அப்போது அங்கு பள்ளி முழுவதும் ஏராளமான டெங்கு புழுக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அப்பள்ளிக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து குழந்தைசாமி கூறுகையில், இந்த பள்ளியில் டெங்கு புழுக்களை ஒழிக்கும் நடவடிக்கை எடுக்குமாறு கடந்த வாரமே மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளித் திறப்பதற்குள்...
எனினும் பள்ளி நிர்வாகம் அலட்சியமாக இருக்கிறது. தற்போது 24 மணி நேரம் கெடு விதித்துள்ளோம். அதற்குள் அங்குள்ள டெங்கு புழுக்ககளை ஒழித்துவிட்டு பள்ளியை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம்.

104 எண்ணில் புகார்
மேலும் டெங்கு புழுக்கள் உற்பத்தியாகும் நிலையில் செயல்படும் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். டெங்கு புழுக்கள் உற்பத்தி குறித்து புகார் அளிக்க 104 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றார் குழந்தைசாமி.












Click it and Unblock the Notifications