அடுத்தடுத்து மழை லீவு எதிரொலி.. புள்ளைகளா, அரைப் பரீட்சைக்கு லீவே கிடையாதாமே!
சென்னை: அடுத்தடுத்து மழை தொடர்பாக கிடைத்து வந்த விடுமுறையால் மகிழ்ந்து, ரமணனுக்கு பேஸ்புக்கில் கட் அவுட் வைத்து பாலாபிஷேகம் செய்து பள்ளிக் குழந்தைகள் மகிழ்ச்சி அடைந்து வரும் நிலையில் தற்போது அரைப் பரீட்சை விடுமுறையை மொத்தமாக ரத்து செய்ய பல தனியார் பள்ளிகள் முடிவு செய்துள்ளன.
இதுவரை இல்லாத அளவுக்கு நீண்ட பல வருடங்களுக்குப் பிறகு கன மழை சென்னையை புரட்டிப் போட்டு விட்டது. வரலாறு காணாத மழை காரணமாக பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் தொடர்ந்து விடுமுறை விடப்பட்டு வருகிறது.

சென்னை மாவட்டம் மட்டுமல்லாமல் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களையும் மழை உலுக்கி விட்டது. கடலூர் மாவட்டமோ பெரும் சோகத்தையும், நஷ்டத்தையும் சந்தித்துள்ளது.
இந்த நிலையில் தொடர் மழை, பல இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்பது, பள்ளிக்கூடங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மீட்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டிருப்பது உள்ளிட்ட காரணங்களுக்காக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வருகிற 22ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதனால் மாணவர்கள் குஷியாக இருந்தாலும் கூட , கல்வி நிறுவனங்கள் மற்றும் பெற்றோர்கள்தான் கவலையில் உள்ளனர். இவிங்க டெய்லி ஸ்கூலுக்குப் போனாலே பாதிப் பாடம் மனசுல தங்காது. இதுல ஒரு வாரம் லீவு விட்டா என்னாகும் என்ற கவலையில் பெற்றோர்கள் உள்ளனர்.
கிட்டத்தட்ட தீபாவளிக்குப் பிறகு பள்ளிகள் பெரும்பாலும் மூடியே கிடக்கின்றன. இதைத் தொடர்ந்து அரைப் பரீட்சை போர்ஷனை முடிக்கும் வழிகள் குறித்து பள்ளிக்கூடங்கள் ஆலோசித்து வருகின்றன. மேலும் அதிக அளவில் லீவு விடப்பட்டு விட்டதால் அரைப் பரீட்சைக்கு விடுமுறை விடாமல் தொடர்ந்து பள்ளியை நடத்துவது குறி்த்தும் பல பள்ளிகள் முடிவெடுத்துள்ளன.
இதுதொடர்பாக பெற்றோர்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பப்பட்டு வருகிறது. அதில் அதிக அளவில் மழை காரணமாக பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டு விட்டதால் அரைப் பரீட்சைக்குப் பின்னரும் பள்ளி தொடர்ந்து இயங்கும். எனவே அரைப் பரீட்சை விடுமுறை என்று நினைத்து எந்தத் திட்டமிடலையும் செய்ய வேண்டாம். அரைப் பரீட்சை முடிந்த பின்னர் நடைபெறும் வகுப்புகளுக்கு மாணவர்கள் கண்டிப்பாக வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications