சம்பளம் தராத டிவி நிறுவனம்.. புகாருடன் கிளம்பிய ஊழியர்கள்
கோவை: லோட்டஸ் தொலைக்காட்சியில் பணியாற்றிய ஊழியர்களுக்கு சம்பளத்தை முறையாக வழங்காமல் அந்நிறுவனம் ஏமாற்றியதாகக் கூறி பாதிக்கப்பட்ட ஊழியர்கள் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், ஊழியர்களின் சம்பளப் பணத்தில் இருந்து பிடித்தம் செய்த இஎஸ்ஐ, பிஃஎப் பணத்தையும் மோசடி செய்து விட்டதாகவும் கோவை மாவட்ட தொழிலாளர் நலத்துறை துணை ஆணையாளரிடம் போலீசார் புகார் அளித்துள்ளனர்.
கோவையை தலைமையிடமாகக் கொண்டு லோட்டஸ் தொலைக்காட்சி கடந்த 2012ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு லோட்டஸ் டிவி நிர்வாகம் ஆரம்ப காலம் முதலே முறையாக ஊதியம் வழங்குவது இல்லை என ஊழியர்களிடம் இருந்து தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வந்தது. மாவட்டங்களில் பணிபுரியும் நிருபர்களுக்கும் ஊதியம் தரவில்லையாம்.

ஒவ்வொரு பிரிவிலும் பணியாற்றும் ஊழியர்களுக்கு குறைந்தது மூன்று அல்லது நான்கு மாத ஊதியத்தை நிர்வாகம் தரமால் நிலுவையில் வைத்துள்ளது. இந்த நிலுவைத் தொகை குறித்து நிர்வாகத்திடம் முறையிட்டால், சம்பந்தப்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்வது, பணி செய்யவிடாமல் தடுப்பது போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்துள்ளது.
சம்பளத்தை பெறுவதற்கு ஊழியர்களை அலைக்கழிப்பது போன்ற செயல்களை செய்து வருவதுடன், ஊழியர்களின் சம்பளப் பணத்தில் பிடித்தம் செய்த இஎஸ்ஐ, பிஃஎப் தொகையையும், தொழிலாளர்களின் கணக்குகளில் செலுத்தாமல் மோசடி செய்து வந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர் புதனன்று கோவை மாவட்ட தொழிலாளர் நலத்துறை துணை ஆணையாளர் தங்கவேலுவை சந்தித்து மனு அளித்துள்ளனர். தொலைக்காட்சி நிறுவனத்திற்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications