அனிதா மரணம்: சென்னையில் பாஜக தலைமை அலுவலகம் இன்றும் முற்றுகை!
சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்தை இன்று தமிழ்நாடு மாணவர் மற்றும் இளையோர் கூட்டமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
சென்னை: பாஜக தலைமை அலுவலகம் கமலாலயத்தை தமிழ்நாடு மாணவர் மற்றும் இளையோர் கூட்டமைப்பினர் முற்றுகையிட முயற்சித்ததால் அங்கு பரபரப்பு உண்டானது.
நீட் தேர்வுக்கு எதிராக போராடி தன் உயிரை இழந்த மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதிகேட்டு பாஜக தலைமை அலுவலகம் கமலாலயத்தை பல்வேறு அமைப்பினர் முற்றுகையிட்டு வருகின்றனர். அதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நேற்று பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய திராவிடர் விடுதலை கழகத்தினர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் தமிழ்நாடு இன்றும் மாணவர் மற்றும் இளையோர் கூட்டமைப்பினர் முற்றுகையிட முயற்சித்தனர். இதனால், அங்கு பரபரப்பு உண்டானது.
அனிதாவின் மரணம் தமிழகத்தை உலுக்கியுள்ள நிலையில், மக்களின் ஒட்டுமொத்த கோபமும் மத்திய, மாநில அரசுகளின் மேல் திரும்பியுள்ளது. அதனால் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அலுவலகங்கள் உள்ள இடங்களில் முற்றுகைப் போராட்டம் நடைபெறுகிறது.