ரயில்வே கேட் திறப்பதில் தாமதம்..ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஹெளரா ரயில் மீது கல்வீச்சு
அரியலூர்: அரியலூரில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ரயில்வே கேட் திறக்கப்படாததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் திருச்சி - ஹெளரா விரைவு ரயில் மீது கற்களை வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர் - ஆர்.எஸ். மாத்தூர் இடையே புதிய இரட்டை ரயில் பாதையில் குருவாயூர் - சென்னை விரைவு ரயிலை இயக்குவதற்காக வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு அரியலூர் - பெரம்பலூர் சாலையின் குறுக்கே ரயில்வே கேட்டில் பாதைகள் அடைக்கப்பட்டன.

மாலை 4 மணிக்கு மேல் குருவாயூர் ரயிலுக்கு பூஜை போட்டு ரயில் புறப்பட்டது. இதைத் தொடர்ந்து, ரயில்வே அதிகாரிகள் கேட்டை திறக்க முயன்றபோது, திடீரென கேட் பழுதாகி திறக்காமல் நின்றது. அப்போது குன்னம் அருகே நிகழந்த விபத்தில் காயமடைந்து ஆம்புலன்ஸில் வந்த பெண் ஒருவர் வலியால் அவதிப்பட்டு கொண்டிருந்தார்.
இதையறிந்த அந்தப் பகுதி மக்களும், பேருந்து பயணிகளும் அந்தப் பெண்ணை தூக்கி ரயில்வே கேட்டை கடந்து ஒரு ஆட்டோவில் ஏற்றி அரியலூர் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதைத் தொடர்ந்து, ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த நேரத்தில் வந்த திருச்சி-ஹெளரா விரைவு ரயில் மீது கல்வீசினர். ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் என்ஜின் அருகே இருந்த கண்ணாடி உடைந்தது. பின்னர் ரயில்வே அதிகாரிகள் பொறியாளர்கள் உதவியுடன் கேட்டை சரி செய்து திறந்துவிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications