அலங்காநல்லூரில் நள்ளிரவை தாண்டியும் தொடரும் போராட்டம்.. கோரிக்கைகள் என்ன ?
அலங்காநல்லூரில் 14 மணிநேரத்திற்கும் மேலாக ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை: அலங்காநல்லூரில் வாடி வாசல் வழியாக குறைந்தது ஐந்து காளைகளையாவது அவிழ்த்து விட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த கோரி காலை முதலே இளைஞர்கள் குவிய தொடங்கினர். வெளியூர்களில் இருந்து வரும் இளைஞர்கள் அலங்காநல்லூரில் குவிந்து விடாத வண்ணம் காவல்துறையினர் அரண் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

காவல்துறையினரின் கட்டுபாட்டையும் மீறி இளைஞர்கள் அலங்காநல்லூர் வாடி வாசல் பகுதியில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
இந்த நிலையில் அவர்களின் போராட்டம் 14 மணிநேரத்துக்கும் மேலாக நீடித்து வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள், வாடி வாசலில் இருந்து காளைகளை அவிழ்த்து விடும் வரை போராட்டம் தொடரும் என கூறியுள்ளனர்.
மேலும் அலங்காநல்லூரில் குறைந்தது 5 காளைகளையாவது அவிழ்த்து விட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். போராட்டத்தில் பங்கேற்றுள்ள இளைஞர்களுக்கு அலங்காநல்லூர் கிராம மக்கள் உணவு வழங்கியும் தங்களது ஆதரவையும் தெரிவித்துள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் அதிகாரப்பூர்வமாக தங்களது கோரிக்கைகள் என்ன என்பது செவ்வாய்க்கிழமை காலை அறிவிப்போம் என போராடும் இளைஞர்கள் அறிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications