பாஜகவிற்கு எதிராக வலுக்கும் போராட்டம்.. ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி உசிலம்பட்டியில் ஆர்ப்பாட்டம்
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரும் போராட்டங்கள் தமிழகத்தில் வலுபெற்றுள்ளன. உசிலம்பட்டியில் இன்று 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உசிலம்பட்டி: ஜல்லிக்கட்டை இந்த ஆண்டு கண்டிப்பாக நடத்த வேண்டும் என்று கோரி தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் சார்பில் உசிலம்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக பொங்கல் திருவிழாவின் போது நடத்தப்பட வேண்டிய ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்தப்படாமல் முடங்கிப் போய்யுள்ளது. இதனால் தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.

மத்திய அரசும் இதோ அதோ என்கிறதே தவிர அதற்கான எந்த ஏற்பாட்டையும் செய்யவில்லை. அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், பாஜக தலைவர் தமிழிசை ஆகியோர் ஏற்கனவே இருந்த கட்சிகளை திட்டித் தீர்க்கின்றார்களே ஒழிய, அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை சொல்லாமல் நழுவி வருகின்றனர். அதிகபட்சமாக, கண்டிப்பாக இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடக்கும் என்றும் அதற்கான முயற்சிகளை மத்திய அரசு செய்து வருகிறது என்றும் சொல்லிவிட்டு இருவரும் சென்றுவிடுவார்கள்.
இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் மதுரையை அடுத்த உசிலம்பட்டியில் ஜல்லிக்கட்டை நடத்தக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அக்கட்சியின் மாநில தலைவர் சங்கிலி தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்று மத்திய அரசைக் கண்டித்தும், ஜல்லிக்கட்டை நடத்தக் கோரியும் கோஷங்களை எழுப்பினார்கள்.
அதே போன்று அலங்காநல்லூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தை நடத்தினார்கள்.












Click it and Unblock the Notifications