தலித் இளைஞர் மர்ம மரணம்- உடலை வாங்க மறுத்து போராட்டம்- தாய் உட்பட 232 பேர் கைது!!
சேலம்: மர்மமான முறையில் தண்டவாளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட தலித் இளைஞர் கோகுல்ராஜின் உடலை வாங்க மறுத்து சேலத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அவரது உறவினர்கள் உள்ளிட்ட 232 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் சாஸ்தா நகரை சேர்ந்த வெங்கடாசலம் மகன் கோகுல்ராஜ். பொறியியல் மாணவரான இவர், கடந்த 24-ஆம் தேதி நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். காதல் விவகாரம் காரணமாக கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டதாகக் கூறி பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி கோகுல்ராஜின் உடல் சேலத்தில் சனிக்கிழமை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இது விடியோவிலும் பதிவு செய்யப்பட்டது.
இதுதவிர கோகுல்ராஜ் இறந்து கிடந்த பள்ளிபாளையம் தண்டவாளப் பகுதிக்கு மருத்துவர் சம்பத்குமார் ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று ஆய்வு நடத்தினார். இந்த விவரங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்த நிலையில் நேற்று காலை சேலம் அரசு மருத்துவமனையில் கோகுல்ராஜின் தாய் சித்ரா, சகோதரர் கலைச்செல்வன் உள்ளிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 150-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். கோகுல்ராஜின் சாவில் தொடர்புடையவர்களைக் கைது செய்ய வேண்டும், சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்து அரசு மருத்துவமனையின் நுழைவு வாயிலில் அமர்ந்தனர்.
இதையடுத்து மாநகரக் காவல் துணை ஆணையர் எஸ்.செல்வராஜ் தலைமையிலான போலீஸார் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் போலீஸாருக்கும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, உண்ணாவிரதம் இருக்க முயன்ற கோகுல்ராஜின் தாய் சித்ரா உள்பட 232 பேரை போலீஸார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications