சப் இன்ஸ்பெக்டர்களை கத்தியால் வெட்டிய சைக்கோ நபர்.. மக்கள் மடக்கிப் பிடித்தனர்!
கோவை: கோவையில் சப் இன்ஸ்பெக்டர்களை கத்தியால் கழுத்தில் வெட்டிய சைக்கோ நபரை பொதுமக்களே மடக்கிப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை உக்கடம் அருகே லாரிப்பேட்டை பகுதியில் பெரியகடை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கன்னிமார் கோவில் அருகே சைக்கோ வாலிபர் ஒருவர் கையில் கத்தியை வைத்து மிரட்டிக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
அப்போது வாலிபர் ஒருவர் போலீசாரைப் பார்த்தவுடன் தான் வைத்திருந்த கத்தியை சாலையில் வைத்தான். இதையடுத்து அவனிடம் விசாரணை செய்ய சப் இன்ஸ்பெக்டர்கள் சுரேந்திரன், ஜோகி ஆகியோர் அருகில் சென்றனர். அப்போது சைக்கோ வாலிபர் திடீரென பாய்ந்து கத்தியை எடுத்து சப் இன்ஸ்பெக்டர்கள் கழுத்தில் வெட்டினான்
இதனால் அங்கிருந்த பொதுமக்கள் சைக்கோவை பிடிக்க பாய்ந்தனர். அப்போது அங்கிருந்த பொதுமக்களில் கார்த்தி (24) என்பவர் கையையும் சைக்கோ வாலிபர் கத்தியால் வெட்டினான். இதையடுத்து அங்கிருந்த கத்தியை காட்டி மிரட்டி அங்கிருந்து தப்பியோடி முயன்றான். இதனையடுத்து அங்கிருந்த நூற்றுக்கணக்கானோர் சேர்ந்து விரட்டிப் பிடித்து அந்த நபரைப் பிடித்தனர். பின்னர் சரமாரியாக அடித்தனர்.
விசாரணையில், சைக்கோ வாலிபர் குறிச்சி பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் (33) என்பது தெரியவந்தது. இவருக்கு திருமணமாகவில்லை. இந்த சம்பவம் குறித்து அவரது சகோதரியிடம் போலீசார் விசாரித்த போது, கடந்த 10 நாட்களாக கோவிலுக்கு சென்றுவிட்டு அனைவரையும் அடித்ததால் நாங்கள் மதுக்கரை மார்க்கெட் பகுதிக்கு சென்று விட்டோம் என தெரிவித்தார்.
பிரபாகரன் மனித உரிமை கழகத்தில் உறுப்பினராக இருப்பது தெரியவந்தது. கஞ்சா பழக்கத்திற்கு ஆளாகி அகோரிகள் போன்று சைக்கோ தனமாக இவ்வாறு கத்தியை எடுத்துக் கொண்டு அனைவரும் மிரட்டி வந்தது தெரியவந்தது.
காயமடைந்த சப் இன்ஸ்பெக்டர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சைக்கோ வாலிபரை பெரியகடை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தபோது அங்கு சிவனே, சிவனே என்றும், பள்ளிவாசலில் தொழ போகிறேன் என்னை விடுங்கள் என்றும், போலீசாரை வாடா, போடா எனவும் அழைத்தார். இதுகுறித்து பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.