சென்னையில் தொடரும் பயங்கரம்... வீட்டில் தனியாக இருந்த பிரபல உளவியல் நிபுணர் கொலை!
சென்னை: சென்னையில் வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான உளவியல் நிபுணர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் பெண் மருத்துவர் ஒருவர் அவரது வீட்டு வேலைக்காரப் பெண்மணி மற்றும் டிரைவரால் படுகொலை செய்யப்பட்டார். இந்தப் பரபரப்பு அடங்குவதற்கு முன்னதாகவே தற்போது மற்றொரு பெண் உளவியல் நிபுணர் கொலை செய்யப் பட்டுள்ளார்.
சென்னை எழும்பூர் எத்திராஜ் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 7 வது மாடியில் யம்மா (82) என்ற மருத்துவர் தங்கி கிளினிக் நடத்தி வந்தார். உளவியல் சிகிச்சை நிபுணரான இவர் வீட்டில் தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில், நேற்று காலை அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தனது வீட்டில் யம்மா மர்மான நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் யம்மாவின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து வீட்டிலிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது, அதில் கடந்த மர்ம நபர் ஒருவர் வீட்டுக்குள் நுழைவதும், பின்பு வெளியே செல்வதும் பதிவாகி இருந்தது. மேலும், யம்மாவின் வீட்டிலிருந்த சில நகைகள், ஒரு கம்ப்யூட்டர் உபகரணங்களும் காணால் போய் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
இதற்கிடையே, பிரேத பரிசோதனை அறிக்கையில் உளவியல் நிபுணர் யம்மா கொலை செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, உளவியல் நிபுணர் யம்மா கொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
திருட்டு சம்பவத்தில் யம்மா கொலை செய்யப் பட்டாரா அல்லது கொலை வழக்கை திசை திருப்புவதற்காக அங்கிருந்த சில பொருட்கள் திருடப் பட்டனவா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.