வெள்ளம் சூழ்ந்த வீடுகளுக்குள் பாம்புகள்... சென்னை மாநகராட்சியைக் கண்டித்து சாலை மறியல்
சென்னை: சென்னை மடிப்பாக்கத்தில் வெள்ளம் சூழ்ந்த வீடுகளுக்குள் பாம்புகள் புகுந்து விட்டதாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் பெய்த பலத்த மழை காரணமாக புறநகர் பகுதிகளான மடிப்பாக்கம், ஆதம்பாக்கம்,வேளச்சேரி,புழுதிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளை சுற்றி மழைநீர் தேங்கி நிற்கிறது. ஆதம்பாக்கம், புழுதிவாக்கம் பகுதியில் தேங்கி நின்ற மழைநீரை மோட்டார்கள் மூலம் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மடிப்பாக்கம் பெரியார் நகர் பகுதியில் இதுவரை எவ்வித நிவாரண பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் வெள்ளம் சூழ்ந்த வீடுகளுக்குள் பாம்புகள் புகுந்திருப்பதாகவும், இதனால் அப்பகுதி மக்கள் வீடுகளுக்குள் குடியிருக்க முடியவில்லை என்றும் புகார் தெரிவித்தனர். மேலும் மாநகராட்சி நிர்வாகம் மழை நீரை அப்புறப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால், மாநகராட்சி சார்பில் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாததியடுத்து, அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட ஏராளமான பொதுமக்கள் பெரியார் நகர் மெயின் ரோட்டில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது பற்றி தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். வீடுகளை சூழ்ந்து நிற்கும் மழைநீரை மோட்டார் மூலம் அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications