பொருட்காட்சி அனுமதியில் முறைகேடு: நெல்லையில் பெண் பி.ஆர்.ஓ.,சஸ்பெண்ட்
நெல்லை மாவட்ட மக்கள் செய்தி தொடர்புத் துறை அலுவலர் ஆறுமுகச்செல்வி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
நெல்லை: திருநெல்வேலியில் தனியார் பொருட்காட்சிக்கு அனுமதி வழங்கிய சர்ச்சையில் மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி ஆறுமுக செல்வி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சஸ்பெண்ட் ஆகியுள்ள பி.ஆர்.ஓ.,ஆறுமுகசெல்வி, விடுதலை போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின்
பேத்தியாவார்.
நெல்லை மாவட்ட ஆட்சியராக கருணாகரன் செயல்படுகிறார். நெல்லை மாவட்டத்தில் ஆலங்குளம், புளியங்குடி
ஆகிய இடங்களில் தனியார் பொருட்காட்சிகள் அமைக்க இவரிடம் அனுமதி கோரி விண்ணப்பம் வந்தது.
ராட்டினம் போன்றவை இயக்குவதில் பாதுகாப்பு குளறுபடிகள் காரணமாக அதற்கு அனுமதி மறுத்து கலெக்டர்
உத்தரவிட்டுள்ளார்.
இருப்பினும் பொருட்காட்சிகள் நடத்துவது செய்தி மக்கள் தொடர்பு துறையின் கீழ் வருவதால், செய்தி மக்கள் தொடர்பு அதிகாரியான ஆறுமுக செல்வி அனுமதி வழங்கியதாக தெரிகிறது. இதுகுறித்து கலெக்டர் விசாரணை நடத்தினார். அனுமதி வழங்கியதில் முறைகேடுகள் இருப்பது தெரியவந்தது. எனவே பி.ஆர்.ஓ.,வை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இவருக்கு முன்பு பி.ஆர்.ஓ.,வாக இருந்த அண்ணா என்பவர், கலெக்டருடன் மோதல் போக்கை கடைபிடித்ததாக கூறப்படுகிறது. எனவே அவர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி நெல்லை மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரிகள் மாற்றப்படுகின்றனர். தற்போது சஸ்பெண்ட் ஆகியுள்ள பி.ஆர்.ஓ.,ஆறுமுகசெல்வி, விடுதலை போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் பேத்தியாவார்.