இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற 'டிராமா' போடுகிறதா தினகரன் கோஷ்டி?
அதிமுக அம்மா அணியில் அரங்கேறும் அதிரடி நிகழ்வுகள் இரட்டை இலைச்சின்னத்தை கைப்பற்ற தினகரன் அணி நாடகமாடுகிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: அதிமுக அம்மா அணியில் அரங்கேறும் அதிரடி நிகழ்வுகள் இரட்டை இலைச்சின்னத்தை கைப்பற்ற தினகரன் அணி நாடகமாடுகிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தினகரன் தரப்புக்கு இரட்டை இலைச் சின்னம் கிடைக்காது என்ற உறுதியாகியுள்ள நிலையில் அதனை பெற அந்த அணியினர் நாடகமாடுகின்றனரா என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளராகி கட்சியை கைப்பற்றிய சசிகலா முதல்வராகி ஆட்சியை கைப்பற்ற நினைத்ததால் அதிமுக சசிகலா அணி ஓபிஎஸ் அணி என இரண்டாக உடைந்தது. எம்எல்ஏக்களின் ஆதரவால் சசிகலா அணியின் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு ஆட்சியமைத்தது. இதையடுத்து கட்சியும் ஆட்சியும் சசிகலா குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் சென்றது.
இதையடுத்து கட்சியையும் ஆட்சியையும் சசிகலா குடும்பத்தினரிடம் இருந்து கைப்பற்ற எண்ணிய ஓபிஎஸ் அணி, அவர் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது என தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது. மேலும் தாங்களே உண்மையான அதிமுக என்பதால் கட்சியும் சின்னமும் தங்களுக்கே வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதற்கான விசாரணை நடைபெற்று வந்த நிலையில் ஆர்கே நகர் இடைத்தேர்தல் அறிவிப்பு வந்தது.
இரட்டை இலை முடக்கம்
அப்போது இரு அணியும் இரட்டை இலைச் சின்னத்துக்கு போட்டி போட்டன. இதையடுத்து தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்கியது.
மேலும் இரு அணிகளும் கட்சியின் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் புதிய பெயர், புதிய சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.
இடைத்தேர்தல் ரத்து
தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் டிடிவி.தினகரன் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததற்கான ஆவணங்கள் சிக்கியதால் ஆர்கே நகர் இடைத்தேரர்தல் ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரை தகுதி நீக்கம் செய்யுமாறு அனைத்துக்கட்சிகளும் வலியுறுத்தி வந்தன.
இரட்டை இலையை பெற லஞ்சம்
இந்நிலையில் இரட்டை இலைச்சின்னத்தை பெற்றுத் தருமாறுக்கூறி டிடிவி.தினகரன் டெல்லியைச் சேர்ந்த சுகேஷ் சந்திரா என்ற தொழிலதிபரிடம் ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்தார். இது தேர்தல் ஆணையத்துக்கே கொடுக்கப்பட்ட லஞ்சம் என அனைத்துக்கட்சியினரும் அ/திர்ச்சி தெரிவித்தனர்.
கை நழுவிய வாய்ப்புகள்
இதைத்தொடர்ந்து டிடிவி தினகரன் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்றும் அவரது அரசியல் வாழ்கைக்கே முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் கூறப்பட்டது. மேலும் லஞ்சம் கொடுத்த இரட்டை இலை சின்னத்தை பெற முயன்றதால் இரட்டை இலை கிடைப்பதற்காக மிஞ்சியிருந்த வாய்ப்புகளும் நழுவியதாக கருதப்பட்டது.
சசிகலா கோஷ்டியின் டிராமாவா?
இந்நிலையில் சசிகலா குடும்பத்தை ஒட்டுமொத்தமாக நீக்குவதாக எடப்பாடி தலைமையிலான அமைச்சர்கள் முடிவு செய்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதுவரை சின்னம்மா சின்னம்மா என சசிகலா தரப்புக்கு ஆதரவு தெரிவித்து வந்த அமைச்சர்கள் திடீரென அவர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருப்பது இரட்டை இலைச்சின்னத்தை கைப்பற்றுவதற்காக போடுகிற டிராமா என சந்தேகம் எழுந்துள்ளது.