கிரண்பேடியை ஆளுநர் பதவியிலிருந்து மாற்ற வேண்டும்.. புதுச்சேரி காங். எம்எல்ஏக்கள் திடீர் போர்க்கொடி!
புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடியை மாற்றக்கோரி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர். முதல்வருடன் கிரண் பேடி மோதல் போக்கை கடைபிடிப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
புதுச்சேரி: ஆளுநர் கிரண் பேடியை மாற்றக்கோரி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர். முதல்வருடன் அவர் மோதல் போக்கை கடைபிடிப்பதாகவும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பொதுமக்கள் பிரச்னைகள், அரசு திட்டங்களை வேகமாக செயல்படுத்தும் வகையில் அனைத்து அரசு அதிகாரிகள் இடம் பெற்றிருந்த வாட்ஸ் அப் குரூப்பை நடத்தி வந்தார். அந்தக் குரூப்பில் இருந்த சிவக்குமார் என்ற அதிகாரி ஆபாசப்படம் பதிவிட்டதாக பிரச்சனை எழுந்தது.

இதையடுத்து அனைத்து அதிகாரிகளும் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இருந்து உடனே வெளியேற வேண்டும் என முதல்வர் நாராயணசாமி அரசு பணியாளர் நலத்துறை சார்பில் உத்தரவு பிறப்பித்திருந்தார். முதல்வரின் இந்த உத்தரவை ஆளுநர் கிரண்பேடி நேற்று ரத்து செய்தார்.
இதனால் கிரண்பேடிக்கும் முதல்வர் நாராயணசாமிக்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியது. இந்நிலையில் ஆளுநர் கிரண்பேடி முதல்வர் நாராயணசாமியுடன் மோதல் போக்கை கடைபிடிப்பதாக கூறி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக அம்மாநில ஆளும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில் ஆளுநர் கிரண்பேடி புதுச்சேரி அரசுக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வதாகவும், அவரை மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிரண்பேடியின் நடவடிக்கை, அரசின் நடவடிக்கையை முடக்குவதாக உள்ளதாகவும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் கிரண்பேடியின் நடவடிக்கை குறித்து எம்எல்ஏக்கள் ஆலோசனையிலும் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications