சேர்ந்து "சியர்ஸ்"... அப்புறம் வாய்ச்சண்டை.. சரமாரியாக அடி.. மனைவி பலி.. கணவர் எஸ்கேப்!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே குடிபோதையில் மனைவியைக் கல்லால் அடித்துக் கொன்ற கணவரைப் போலீசார் தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் மலைக்குடிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் தமிழ ரசன்-அழகுமணி தம்பதியினர். விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை சேர்ந்த தமிழரசன் கேரளாவில் கூலி வேலைக்கு சென்றபோது அவருடன் வேலை பார்த்த அழகுமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்குப் பிறகு கணவரும், மனைவியும் மலைக்குடிப்பட்டியில் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்தனர். இந்த தம்பதிக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அவர்கள் விராலிமலை அருகே உள்ள பிரேமானந்தா ஆசிரமத்தில் தங்கி படித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் கணவன், மனைவி இருவருக்கும் குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. நேற்று மாலை இருவரும் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின் அது தகராறாக மாறியது.
ஆத்திரம் அடைந்த தமிழரசன் அங்கிருந்த கல்லை எடுத்து மனைவி அழகுமணியின் முகம் மற்றும் உடல் முழுவதும் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த அழகுமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சிறிது நேரத்தில் போதையில் இருந்த தமிழரசன் நிதானம் இழந்து மயங்கி விழுந்தார்.
இரவு 10 மணியளவில், போதை தெளிந்து எழுந்த தமிழரசன் மனைவி இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானார்.
அக்கம்பக்கத்தார் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த இலுப்பூர் போலீசார், அழகுமணியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இக்கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வரும் போலீசார், தலைமறைவான தமிழரசனை தேடி வருகிறார்கள்.
இச்சம்பவத்தால் இலுப்பூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.