தேர்தல் தோல்வி குறித்து ஆலோசனை..விஜயகாந்துடன் வாசன், ம.ந.கூட்டணி தலைவர்கள் சந்திப்பு
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தை கோயம்பேட்டில் உள்ள அவரது அலுவலகத்தில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன், மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள் வைகோ, ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், தொல்.திருமாவளவன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி, தமாகா ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இந்த கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவிக்கப்பட்டார்.

எனினும், இக்கூட்டணியினர் போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியடைந்தனர். குறிப்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தான் போட்டியிட் உளுந்தூர்பேட்டை தொகுதியில் டெபாசிட்டை பறிகொடுத்தார். அவருக்கு 3வது இடமே கிடைத்தது.
காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட்ட விசிக தலைவர் திருமாவளவன் 87 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். அதேசமயம் மதிமுக பொதுச்செயலாளரும் மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துவிட்டு பின்னர் போட்டியில் இருந்து விலகினார்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோரும் தேர்தலில் போட்டியிடவில்லை. கூட்டணி சார்பில் போட்டியிட்ட அனைவரும் தோல்வியைத் தழுவினர்.
இந்நிலையில், மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் வைகோ, தொல்.திருமாவளவன், இரா.முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் இன்று மாலை, தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது அலுவலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடந்த இந்த சந்திப்பின்போது, தேர்தல் தோல்வி குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ கூறுகையில், தேர்தலில் பணபலத்தால் திமுக, அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.தேர்தலில் முறைகேடுகளை தடுக்க தேர்தல் ஆணையம் தவறிவிட்டது எனக் கூறினார். மேலும் தேமுதிக மக்கள் நலக் கூட்டணி தொடரும் எனவும் மக்கள் நலனை காக்க, எதிர்கால இளைஞர்களின் நலனை காக்க ஆறு கட்சிகளும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளோம் என்றார்












Click it and Unblock the Notifications