30 வடமாவட்ட தொகுதிகளை விட்டுத்தர மறுக்கும் விஜயகாந்த்.... ம.ந.கூ. தலைவர்கள் "ஷாக்"
சென்னை: தேமுதிகவுடனான தொகுதிப் பங்கீட்டின் தொடக்கத்திலேயே மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். 30 வடமாவட்ட தொகுதிகளை தேமுதிக விட்டுக்கொடுக்க முடியாது என விஜயகாந்த் பிடிவாதமாக கூறியுள்ளதால் விக்கித்துப் போயுள்ளனர் அதன் தலைவர்கள்.
தேமுதிகவை எந்த கட்சி வளைப்பது என்ற பிரயத்தனத்தில் வெற்றி பெற்றது மக்கள் நலக் கூட்டணி. தேமுதிக+ மக்கள் நலக் கூட்டணி இணைந்து "கேப்டன் விஜயகாந்த் அணி" என உதயமானது. தேமுதிக 124; மக்கள் நலக் கூட்டணி 110 தொகுதிகளில் போட்டியிடவும் ஒப்பந்தம் போடப்பட்டது.
ஆனால் இந்த கூட்டணி உதயமான நாளே பஞ்சாயத்தாகிவிட்டது. மக்கள் நலக் கூட்டணியில் உள்ள இடதுசாரித் தலைவர்களோ, "கேப்டன் விஜயகாந்த் அணி" என்றெல்லாம் அழைக்கமுடியாது என கறாராக சொல்லிவிட்டனர். இருப்பினும் தேமுதிகவினரோ விடாப்பிடியாக இது "கேப்டன் விஜயகாந்த் அணி"தா என கூறி வருகின்றனர்.

எந்தெந்த தொகுதிகள்...
தற்போது தொகுதிப் பங்கீட்டிலும் சிக்கல் வெடித்திருக்கிறது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்துக்கு நேற்று சென்ற மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் விஜயகாந்துடன் போட்டியிடும் தொகுதிகளை அடையாளம் காணுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பேச்சுவார்த்தையின் போது தேமுதிக போட்டியிட உள்ள 124 தொகுதிகளின் பெயர்கள் ம.ந.கூட்டணி தலைவர்களிடம் கொடுக்கப்பட்டது.

ம.ந.கூவின் 70 தொகுதிகளில் தேமுதிக
அந்த பட்டியலைப் பார்த்ததும் ம.ந.கூ. தலைவர்கள் முகத்தில் ஈயாடாவில்லை. ஏனெனில் தேமுதிக போட்டியிட உள்ள தொகுதிகளில் 70 தொகுதிகள், மக்கள் நலக் கூட்டணி கட்சிகள் போட்டியிட விரும்பிய தொகுதிகள். இது குறித்து விஜயகாந்த்திடம் அந்த தலைவர்கள் சுட்டிக்காட்டினர்.

தென்மாவட்டத்தில் எடுத்துக்கோங்க..
ஆனால் விஜயகாந்த் திட்டவட்டமாக அதிகபட்சமாக 10 தொகுதிகளை அதுவும் தென்மாவட்டங்களில் விட்டுத் தருகிறோம் என்று பதிலளித்திருக்கிறார். மக்கள் நலக் கூட்டணி தலைவர்களோ வடமாவட்டங்களில் 30 தொகுதிகளை விட்டுத்தந்தே ஆக வேண்டும் என்று அடம் பிடித்துள்ளனர். ஆனால் விஜயகாந்த்தோ இதற்கு பிடிகொடுக்கவில்லையாம்.

விருந்து புறக்கணிப்பு
இதனால் அதிருப்தியடைந்த மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் விஜயகாந்த் ஏற்பாடு செய்த விருந்தை புறக்கணித்துவிட்டு புறப்பட்டுவிட்டதாக தேமுதிக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. வடமாவட்டங்களில் கணிசமான இடங்களில் விடுதலை சிறுத்தைகள் போட்டியிட விரும்புகிறது. ஆனால் தேமுதிக இதற்கு செக் வைப்பதால் கூட்டணி என்னவாகும்? என்ற கேள்வி அரசியல் வட்டாரங்கள் எழுப்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications