மக்கள் நலக் கூட்டணியை மக்கள் தூக்கிப் போட்டுட்டாங்க போலயே!
சென்னை: சட்டசபைத் தேர்தலில் யார் வெல்வார் என்பது அதிகாரப்பூர்வமாக மே 19ம் தேதிதான் தெரிய வரும். ஆனால் 4 எக்சிட் போல்கள் திமுக ஆட்சியைப் பிடிக்கும் என கூறியுள்ளன. ஒரு எக்ஸிட் போல் அதிமுக ஆட்சிக்கு வரும் என்கிறது.
அதேசமயம், அந்த எக்சிட் போல்களைக் கவனித்துப் பார்த்தால் அதில் மக்கள் நலக் கூட்டணியின் நிலை கடலில் கரைத்து விடப்பட்ட பெருங்காயமாகத்தான் உள்ளது.
மிகப் பெரிய அளவில் பேசப்பட்ட, எதிர்பார்க்கப்பட்ட கூட்டணி மக்கள் நலக் கூட்டணி. தேசிய அளவில் பரபரப்பையும் கிளப்பியது இந்தக் கூட்டணி. காரணம், அதன் ஆரம்பம் அப்படி அமர்க்களமாக இருந்தது.
இரு கம்யூனிஸ்ட் கட்சிகளையும், தலித் சக்தியான விடுதலைச் சிறுத்தைகளையும் இணைத்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உருவாக்கிய கூட்டணி இது.

பரபரப்பான பிரச்சாரம்
இந்த நான்கு தலைவர்களும் சேர்ந்து இருந்தவரை கூட்டணிக்கு மக்களிடையே நல்லஆதரவு நிலவி வந்தது. ஏன் திமுகவே கூட சற்று பயந்து போய்த்தான் இதைப் பார்க்க ஆரம்பித்தது.

மாற்றம் வரும் என்ற நம்பிக்கை
கொள்கை மாற்று, மாற்று அரசியல் என்ற முழக்கத்துடன் கரம் கோர்த்த இவர்கள் மீது மாற்றத்தை எதிர்பார்த்து ஏங்கித் தவித்துக் கொண்டிருந்தவர்கள் பெரும் நம்பிக்கை கொண்டனர். இதனால் ஆதரவும் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே வந்தது.

விஜயகாந்த் - வாசன் வருகையால் தடம் புரண்டது
ஆனால் இந்தக் கூட்டணிக் கட்சிகள் அத்தனையும் மொத்தமாக போய் தேமுதவிடம் சரணைந்தபோது அவ்வளவு நம்பிக்கையும் தவிடு பொடியாகிப் போனது. மேலும் விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்தது கூட்டணி மீதான நம்பிக்கையைத் தகர்த்தது. அதை விட உச்சமாக இதை கேப்டன் கூட்டணி என்று வைகோ கூறியதுதான் அனைவரையும் அதிர வைத்தது.

ம.ந.கூ டூ கே.ந.கூ
அதுவரை ம.ந.கூ (மக்கள் நலக் கூட்டணி) என்று அழைத்து வந்த பலரும் சமூக வலைதளங்களில் இதை கே.ந.கூ (கேப்டன் நலக் கூட்டணி) என்று கிண்டலடிக்க ஆரம்பித்து விட்டனர்.

திமுக - அதிமுகவில் இடம் கிடைக்காதவர்களின் கூட்டணி
உண்மையில் இந்தக் கூட்டணியானது திமுக, அதிமுக கூட்டணிகளில் இடம் கிடைக்காத கட்சிகள் இணைந்து அமைத்த கூட்டணியாக மாறிப் போனது. மாற்றத்தை இவர்கள் தருவார்கள் என்ற நம்பிக்கையும் அடிபட்டுப் போய் விட்டது. இதையே தற்போது எக்சிட் போல்கள் காட்டியுள்ளன.

சொல்லிக் கொள்ளும்படி கிடைக்காது
இந்தியா டுடே எக்சிட் போலில் மற்றவர்கள் வரிசையில் 6 இடமே கணிக்கப்பட்டுள்ளது. நியூஸ் நேஷன் 21 இடங்கள் வரும் எனக் கூறியுள்ளது. சி வோட்டர் 17 இடங்களையேத் தருகிறது. நியூஸ் எக்ஸ் 4 இடங்கள் எனக் கூறியுள்ளது. ஏபிபி நீல்சன் கணித்துள்ளது 6. அனைத்து எக்சிட் போல்களையும் மொத்தமாக ஒப்பிட்டு கணித்துள்ள போல் ஆப் போல்ஸ் கூறுவது 11 இடங்களே. இந்த மற்றவை என்பதில் மக்கள் நலக் கூட்டணி மட்டுமல்லாமல் பாமகவும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களிடம் எடுபடவில்லை
திமுக அல்லது அதிமுக என்ற மன நிலையிலிருந்து மக்கள் இன்னும் மாறி வரவில்லை என்பது இதற்கு ஒரு முக்கியக் காரணமாக இருந்தாலும் கூட மக்களிடம் நம்பிக்கை பெறும் வகையில் இந்த மக்கள் நலக் கூட்டணி, தேமுதிக, தமாகா தலைவர்கள் உருவெடுக்கவில்லை என்பதையும் உணர்த்துவதாக உள்ளது.

திமுகவின் புத்திசாலித்தனம்
மேலும் மக்கள் நலக் கூட்டணியில் விஜயகாந்த், வாசன் இணைந்ததைத் தொடர்ந்து திமுக தனது பிரச்சாரத்தை மேலும் தீவிரப்படுத்தி அவர்கள் (3வது அணி) பக்கம் உள்ள பலவீனங்களை தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்டது. அவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் தனது பாணியில் தொடர்ந்து அது தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டதும் மக்களை சென்றடைந்துள்ளதாகவே கருத வேண்டியுள்ளது.

தோல்வி அடைந்த மேலும் ஒரு 3வது அணி
தங்களுக்காக கூட்டணி சேருவதை விட்டு விட்டு மக்களுக்காக கூட்டணி அமைத்து செயல்பட்டால் மட்டுமே 3வது அணியானது எதிர்காலத்தில் மக்களின் கவனத்தை ஈர்க்க முடியும். அந்த வகையில் இந்த 3வது அணியும் தோல்வி அடைந்த 3வது அணிகளின் வரிசையில் இணையும் வாய்ப்புகளை இந்த கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன.












Click it and Unblock the Notifications