மாமூலுக்காக சப்-இன்ஸ்பெக்டர்- ஏட்டு கட்டிப்புரண்டு சண்டை... பொதுமக்கள் முன்னிலையில் அரங்கேறிய மோதல்
சென்னை: சட்டம் ஒழுங்கை காக்க வேண்டிய காவல் துறையினர், மாமூலுக்காக காவல் நிலையம் முன்பு கட்டிப்புரண்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
இந்த சம்பவம் நீலாங்கரை காவல் நிலையத்தில் அரங்கேறி இருக்கிறது. இந்த காவல் நிலையத்தில்தான் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட சிறுவன் மீது இன்ஸ்பெக்டர், துப்பாக்கியால் சுட்ட சம்பவம் நடந்து பரபரப்பை ஏற்படுத்தியது.

இப்போது மாமூல் பிரச்னையால் சப்-இன்ஸ்பெக்டரும், தலைமைக்காவலரும் கட்டிப்புரண்டு சண்டை போட்டு மீண்டும் ஒரு களங்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
இதுகுறித்து காவல் துறை வட்டாரங்கள் கூறுகையில், "நீலாங்கரை கொட்டிவாக்கத்தில் கிருஷ்ணன் என்பவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். கட்டுமானத்துக்கு தேவையான மணல், ஜல்லியை வீட்டின் முன்பு கொட்டி வைத்துள்ளார். அவ்வழியாக இன்று (9ஆம்தேதி) சென்ற நீலாங்கரை சப்-இன்ஸ்பெக்டர், வீட்டின் உரிமையாளரிடம் 'போக்குவரத்துக்கு இடையூறாக இப்படி கட்டுமான பொருட்களை வைப்பது தவறு. உடனடியாக அகற்றுங்கள்' என்றார்.
இதையெல்லாம் கண்டுகொள்ளாமலிருக்க காவல் நிலையத்தில் உள்ள தலைமைக்காவலரை கவனித்து விட்டதாக வீட்டின் உரிமையாளர், கூறியுள்ளார். அதை நம்பாமல் வீட்டின் உரிமையாளரை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு, சப்-இன்ஸ்பெக்டர் காவல் நிலையத்துக்கு வந்தார்.
அங்கிருந்து சம்பந்தப்பட்ட தலைமைக்காவலருக்கு போன் செய்து காவல் நிலையம் வரும்படி கூறினார். அதன்படி அந்த தலைமைக்காவலரும் அங்கு வந்தார். வீட்டின் உரிமையாளர் முன்னிலையில் மாமூல் தொடர்பாக இருவரும் பேசினார்கள். அப்போது சப்-இன்ஸ்பெக்டருக்கும், தலைமைக்காவலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் இருவரும் காவல் நிலையம் முன்பே கட்டிப்புரண்டனர். இதை பொதுமக்களும் வேடிக்கை பார்த்தனர். இதைக்கண்ட சக காவலர்கள் அவர்களின் சண்டையை விலக்கி விட்டனர். இந்த சம்பவம் அனைத்தும் அங்கு உள்ள சி.சி.டி.வி கேமிராவில் பதிவானது. உடனடியாக உயரதிகாரிகளுக்கும் தகவல் பறந்தது.
இதையடுத்து வீட்டின் உரிமையாளர், சப்-இன்ஸ்பெக்டர், தலைமைக்காவலர் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. காவல்துறையை சேர்ந்த இருவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications