'வாட்ஸ் அப்'பில் பிளஸ் 2 வினாத்தாள்: 131 ஆசிரியர்கள் பணியில் இருந்து விடுவிப்பு!அதிகாரிகளுக்கு வலை!
கிருஷ்ணகிரி: வாட்ஸ் அப்பில் பிளஸ் 2 வினாத்தாளை அனுப்பிய விவகாரத்தைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்த 5 தனியார் பள்ளிகளில் தேர்வறைக் கண்காணிப்பாளர்களாக இருந்த 135 ஆசிரியர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இந்த விவகாரத்தில் மாவட்ட கல்வித் துறை அதிகாரிகளுக்கும் தொடர்பிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பரிமளம் மெட்ரிகுலேஷன் பள்ளியில் கடந்த 18-ந் தேதி பிளஸ்-2 கணிதத்தேர்வு நடந்தது. அப்போது வினாத்தாளை செல்போனில் படம் பிடித்து ‘வாட்ஸ் அப்'பில் அனுப்பி, விடைகளை பெற்றதாக ஓசூர் ஸ்ரீவிஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர்கள் மகேந்திரன், கோவிந்தன், உதயகுமார், கார்த்திகேயன் ஆகிய 4 பேரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்

இதனைத் தொடர்ந்து ஓசூர் பள்ளித் தேர்வு மையக் கண்காணிப்பாளர்களாகப் பணியாற்றியவர்களையும், வாட்ஸ் அப் மூலம் வினாத்தாளை அனுப்பிய ஆசிரியர்கள் பணியாற்றிய ஸ்ரீவிஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, அதன் குழுமப் பள்ளிகள் என மொத்தம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 பள்ளிகளைச் சேர்ந்த 135 கண்காணிப்பாளர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
தற்போது கைதான ஆசிரியர்கள் 4 பேர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு ஆகியவற்றில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
இதனிடையே கைது செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு தேர்வு பணி ஒதுக்கீடு செய்த சம்பவத்தில், கல்வி மாவட்ட அலுவலர் வேதகன் தன்ராஜிற்கு தொடர்பு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எனவே அவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக விசாரணை நடத்த சென்னையில் இருந்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் கு.தேவராஜன் இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் செல்கிறார். பின்னர் அவர் ஓசூரில் சம்பவம் நடந்த பள்ளியை பார்வையிட்டு விசாரணை நடத்துகிறார். அவரது விசாரணைக்கு பின்னர் இதில் மேலும் பல தகவல்கள் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இன்று முதல் நடைபெறும் தேர்வுகளுக்கு ஒவ்வொரு தேர்வறைக்கும் தலா 2 பேர் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட உள்ளனர்.












Click it and Unblock the Notifications