ஆர்.பி உதயகுமார் அமைச்சராக பதவியேற்றார்
சென்னை: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக ஆர்.பி. உதயகுமார் பதவியேற்றார்.
தமிழக அமைச்சரவை 13வது முறையாக மாற்றப்பட்டுள்ளது.
நில அபகரிப்பு புகாரில் சிக்கிய அமைச்சர் கே.வி.ராமலிங்கம் திங்கட்கிழமை நீக்கப்பட்டு, புதிய அமைச்சராக சாத்தூர் எம்எல்ஏ ஆர்.பி.உதயகுமார் 2வது முறையாக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பதவி ஏற்பு விழா கிண்டி கவர்னர் மாளிகையில் இன்று காலை 9.45 மணிக்கு நடைபெற்றது.
பதவி ஏற்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்க கவர்னர் மாளிகைக்கு சென்ற முதல்வர் ஜெயலலிதாவை தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

பின்னர் கவர்னர் ரோசய்யாவை முதல்வர் ஜெயலலிதா வரவேற்று புதிய அமைச்சராக ஆர்.பி. உதயகுமாரை அறிமுகம் செய்து வைத்தார். இதைத் தொடர்ந்து பதவி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
புதிய அமைச்சரான ஆர்.பி. உதயகுமாருக்கு கவர்னர் ரோசய்யா பதவி பிரமாணமும், ரகசிய காப்பு உறுதி மொழியும் செய்து வைத்தார். அமைச்சராக பதவி ஏற்ற ஆர்.பி. உதயகுமார் முதல்வர் ஜெயலலிதாவுக்கும், கவர்னர் ரோசய்யாவுக்கும் வணக்கம் தெரிவித்தார்.
அதன் பிறகு முதல்வர் ஜெயலலிதா, கவர்னர் ரோசய்யா ஆகியோர் அனைத்து அமைச்சர்களுடன் அமர்ந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
பதவி ஏற்பு விழா நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மேயர் சைதை துரைசாமி, அரசு உயர் அதிகாரிகள், பங்கேற்றனர்.
ஏற்கனவே அதிமுக வெற்றி பெற்றவுடன் முதல்வர் ஜெயலலிதாவுடன் இவரும் அமைச்சராக பதவி ஏற்றார். அவர் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்தார். 2011 நவம்பர் 4ம் தேதி பதவி பறிக்கப்பட்டவர்.தற்போது 2வது முறை அவருக்கு அமைச்சரவையில் இடம் தரப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications