அம்மா இட்லிக்காரம்மா… அம்மாவுக்கு ஓட்டுப்போடும்மா… கலந்து கட்டும் விஜயபாஸ்கர்
சென்னை: உற்சவர் வந்தாலே ஊருக்கெல்லாம் தெரியும்... மூலவரே நகர்வலம் வரப்போகிறார் என்றாலே உலகத்துக்கே தெரியவைத்துவிடுவார்கள் நம்ம அரசியல்வாதிகள்.
அதிமுகவின் மூலவரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேர்தல் பிரச்சாரம் களைகட்டியுள்ளது. சிலவாரங்களுக்கு முன்பு வரை கோவில் கோவிலாக ஏறி இறங்கிய அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும், சில தினங்களாக ஆர்.கே.நகரில் வீடு வீடாக வாக்கு சேகரித்து வருகின்றனர். ஜெயலலிதா நியமித்துள்ள 50 பொறுப்பாளர்கள் கொண்ட தேர்தல் பணிக்குழுவினர் தொகுதி முழுவதும் பம்பரமாக சுழன்று தீவிர தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.
வீடு வீடாக விஜயபாஸ்கர்
சுதந்திரபுரம் பகுதியில் தேர்தல் பணிமனை திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களும், கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு வீடாகச் சென்று முதல்வர் ஜெயலலிதாவின் சாதனைகளை எடுத்துக்கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
போடுங்கம்மா ஓட்டு
அரிநாராயணபுரம், அனந்தநாயகி நகர், அம்பேத்கர் நகர் ஆகியவற்றில் உள்ள குடிசைப்பகுதிகளில் டாக்டர் விஜயபாஸ்கர் வாக்கு சேகரித்தார். அவருடன் புதுக்கோட்டை எம்.எல்,.ஏ கார்த்திக் தொண்டைமான், தென்சென்னை வடக்கு மாவட்ட மாணவரணி செயலாளர் ராமலிங்கம், கவுன்சிலர் மதுரை வீரன், 47 வது வட்டம் மேற்கு செயலாளர் ரத்தினம் ஆகியோரும் இரட்டை இலை சின்னத்தை வைத்துக்கொண்டு வாக்கு சேகரித்தனர்.
இட்லிக்காரம்மா
அங்கிருந்த ஒரு இட்லி கடை முன்பு அமர்ந்த விஜயபாஸ்கார், அம்மா இட்லிகாரம்மா அப்படியே அம்மாவுக்கு ஓட்டு போட மறந்துடாதீங்கம்மா என்றார்.
திண்ணையில உட்கார்ந்து
போகும் இடமெங்கும் வீடுகளின் முன் உள்ள திண்ணையில் அமர்ந்து சாவகாசமாக பேசி குசலம் விசாரித்து அப்படியே அதிமுக அரசின் சாதனைகளை எடுத்துச்சொல்லி தனது பாணியில் வாக்கு சேகரித்தார் விஜயபாஸ்கர்.
சாதனை பிரசுரங்கள்
முதல்வர் ஜெயலலிதாவின் சாதனைகள் அடங்கிய பிரசுரங்களை கழக தொண்டர்கள் பொதுமக்களுக்கு வழங்கினார் டாக்டர் சி.விஜயபாஸ்கர்.
2 லட்சம் வாக்குகள்
வாக்கு சேகரிக்க சென்ற இடமெல்லாம் அமைச்சர்கள் மற்றும் கழக நிர்வாகிகளுக்கு பொதுமக்கள் வரவேற்பு கொடுப்பது அவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த ஆதரவு எல்லாம் வாக்குகளாக மாறவேண்டும். 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்கவேண்டும் என்பதுதான் அதிமுகவினரின் தற்போதய லட்சியமாகும். எனவே ஆர்.கே.நகரில் அமைச்சர்கள் அனைவரும் பிஸியாக உள்ளனர்.