ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் களத்தில் 28 பேர் போட்டி... இறுதிப்பட்டியல் வெளியீடு
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதா, சி.மகேந்திரன் உள்ளிட்ட 28 பேர் போட்டியிடுகின்றனர். இதனால் இரண்டு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத் தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 3ம் தேதி தொடங்கி, கடந்த 10ம் தேதியுடன் நிறைவடைந்தது.

தேர்தலில் போட்டியிட முதல்வர் ஜெயலலிதா உட்பட, 50 பேர் மனு தாக்கல் செய்தனர்.கடந்த 11ம் தேதி, வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன; அப்போது, 32 பேர் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, 18 பேர் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாளான இன்று மனு தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர்களான சண்முகம், சுப்பிரமணியன் மற்றும் சந்திரமோகன், பால்கனகராஜ் ஆகிய நான்கு பேர் தங்கள் வேட்பு மனுவை வாபஸ் பெற்றனர்.
இதனையடுத்து 28 பேர் இடைத்தேர்தல் களத்தில் உள்ளனர். சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணிகள் நடந்து வருகிறது. 28 பேர் போட்டியிடுவதால் 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
வாக்குப் பதிவு 27ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் 30ம் தேதி எண்ணப்பட்டு அன்றையதினமே முடிவு அறிவிக்கப்படும்.












Click it and Unblock the Notifications