வேட்பு மனு தாக்கல் செய்ய வேட்பாளர் நேரில் வரத்தேவையில்லை: சந்தீப் சக்சேனா
சென்னை: ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் வேட்பு மனுவை நேரில் வந்து தாக்கல் செய்யவேண்டும் என அவசியமில்லை என்று தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறியுள்ளார். வேட்பாளரின் ஏஜென்ட் அல்லது மனுவை முன்மொழிந்தவர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்யமுடியும் என அவர் தகவல் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலோ, லோக்சபா தேர்தலோ, இடைத்தேர்தலோ, உள்ளாட்சி தேர்தலோ கூட்டமாக சென்று வேட்புமனு தாக்கல் செய்வதுதான் நடைமுறை. ஆனால் 2014 லோக்சபா தேர்தலின் போது, வேட்புமனு தாக்கல் செய்வோர், நேரில் வரவேண்டும் என்ற அவசியம் இல்லை. நேரில் வர இயலாவிட்டால், அவரை முன்மொழிபவர் மட்டும் வந்து மனுவை தாக்கல் செய்யலாம். அதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

மனுத் தாக்கல் செய்ய வரும் வேட்பாளர், தன்னுடன் அதிகபட்சம் 5 பேரை அழைத்து வரலாம். வாக்குச்சாவடி அமைந்துள்ள 100 மீட்டர் எல்லைக்குள் 3 வாகனங்களுக்கு மேல் செல்லக்கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தாலும் அதனை யாரும் பின்பற்றுவதில்லை. கூட்டமாக தொண்டர்கள், ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்புமனு தாக்கல் செய்வதுதான் நடைமுறையாக உள்ளது.
இந்த நிலையில் சென்னையில் ஆர்.கே.நகர் நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு புதன்கிழமை (ஜூன் 3) தொடங்கியது. முதல் நாளான நேற்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உள்ளிட்ட 5 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இடைத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய வரும் 10ஆம் தேதி கடைசி நாளாகும்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா, அந்தக் கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது. திமுக, மதிமுக, பாமக, விடுதலை சிறுத்தைகள், தமாகா ஆகிய கட்சிகள் போட்டியிடப் போவதில்லை என அறிவித்து விட்டன. பாஜக, தேமுதிக, காங்கிரஸ் கட்சிகளின் நிலை என்னவென்று தெரியவில்லை.
வேட்புமனு தாக்கல் செய்ய தண்டையார்பேட்டையில் தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரியாக சென்னை மாநகராட்சி மண்டல அதிகாரி சௌரிராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். நாளைய தினம் (ஜூன் 5) ஜெயலலிதா வேட்புமனுவை தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் வேட்பாளர்கள் தங்களின் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய நேரில் வரத் தேவையில்லை என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பினை அடுத்து ஜெயலலிதா வேட்புமனு தாக்கல் செய்ய நேரில் செல்வாரா அல்லது அவரது சார்பில் வேறு யாராவது தாக்கல் செய்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இடைத்தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள், வரும் 11ஆம் தேதி பரிசீலனை செய்யப்படவுள்ளன. மனுக்களைத் திரும்பப் பெற ஜூன் 13ஆம் தேதி கடைசி நாளாகும். வாக்குப் பதிவு ஜூன் 27-ஆம் தேதியாகும்.












Click it and Unblock the Notifications