அப்பல்லோவுக்கு வந்த ராகுல்.. ஜெ.வை பார்க்கவில்லை.. டாக்டர்களை மட்டும் சந்தித்தார் #rahulgandhi
சென்னை: உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவைக் காண காங்கிரஸ் கட்சித்துணைத்தலைவர் ராகுல் காந்தி சென்னை அப்பல்லோ வந்திருந்தார். அங்கு அவர் டாக்டர்களைச் சந்தித்து முதல்வரின் உடல் நலம் விசாரித்தார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 16 நாட்களுக்கும் மேலாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனை நிர்வாகம் அளிக்கும் அறிக்கை மட்டுமே மக்களுக்கு அளிக்கப்படுகிறது. அவர் நீண்ட நாட்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகம் நேற்றிரவு அறிக்கை அளித்துள்ளது. இதனால் அதிமுக தொண்டர்கள் கவலையடைந்துள்ளனர்.
ஜெயலலிதா விரைவில் நலம்பெற வேண்டும் என்று கடந்த சில தினங்களுக்கு முன்னர் டுவிட்டரில் வாழ்த்து கூறியிருந்த காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி, இன்று திடீரென நேரடியாக ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து விசாரிக்க சென்னை வந்தார். சிறப்பு விமானம் மூலம் டெல்லியில் இருந்து சென்னை வந்துள்ள ராகுல்காந்தி கார் மூலம் மருத்துவமனைக்கு சென்று ஜெயலலிதாவின் உடல்நலம் விசாரித்தார். ராகுல் வருகையைத் தொடர்ந்து பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மருத்துவமனைக்கு வந்த அவரை தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். பின்னர் முதல்வருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்களை ராகுல் காந்தி சந்தித்து முதல்வரின் நலம் விசாரித்துக் குறித்துக் கேட்டறிந்தார். அவர் முதல்வர் அனுமதிக்கப்பட்டுள்ள வார்டுக்குச் சென்றாரா என்பது தெரியவில்லை. முதல்வரைப் பார்த்ததாகவும் தெரியவில்லை.
முன்னதாக ராகுல்காந்தி இசட் பிரிவு பாதுகாப்பில் உள்ளதால் சென்னையிலும், அப்பல்லோ மருத்துவமனையிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. பிரதான கேட் அருகே தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
கடந்த 1ம் தேதியன்று ஆளுநர் வித்யாசாகர் ராவ் அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்று முதல்வர் சிகிச்சை பெறுவது குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் அறிக்கை வெளியிட்டார். இதன் பின்னர் முக்கிய அரசியல் தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்று வருகின்றனர். பொன் ராதாகிருஷ்ணன், திருமாவளவன், முத்தரசன், வேல்முருகன், தா. பாண்டியன், சீமான் ஆகியோர் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று முதல்வரின் உடல்நலம் குறித்து விசாரித்து வந்தனர்.
முதல்வர் ஜெயலலிதா நலமுடன் இருப்பதாகவும், வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் அனைவரும் கூறினர். இந்த நிலையில் ராகுல்காந்தி இன்று சென்னைக்கு வந்தார். மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், ஆளுநர் வித்யாசாகர் ராவிற்கு அடுத்த படியாக பிரபல அரசியல் தலைவரான ராகுல்காந்தி அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதாவை காண வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராகுல்காந்தியின் வருகை ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. சிறப்பு விமானம் மூலம் சென்னை வந்த ராகுல்காந்தி விமானநிலையத்தில் இருந்து கார் மூலம் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார். முன்னதாகவே அங்கு வந்து வாசலில் காத்திருந்த மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் காத்திருந்து அவரை வரவேற்றார்.