சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் காங்.... ராகுல் ஆலோசனை - ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தலை தப்பியது
சென்னை: சட்டசபை தேர்தல் வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையில் மாற்றமில்லை என்று காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார். இந்த அறிவிப்பினால் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் தலை தப்பியுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் மற்றும் தொண்டர்களின் கருத்தை கேட்டறிந்து முடிவு எடுக்கப்படும் என்று கூறியுள்ள ராகுல்காந்தி, தமிழக தலைவர்கள், முன்னாள் அமைச்சர்களை டெல்லிக்கு அழைத்து நாளை ஆலோசனை நடத்துகிறார்.
ராகுல்காந்தி உடனான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், சுதர்சன நாச்சியப்பன், தங்கபாலு உள்பட 13 பேர் டெல்லி விரைந்துள்ளனர்.

தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ்
இந்த ஆண்டு சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த செய்தியாளர்களை டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி சந்தித்தார். அப்போது அவர், தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை மாற்றும் எண்ணம் இல்லை. தேர்தல் வரும் சமயத்தில் மாநிலத் தலைமையில் மாற்றம் தேவையில்லை என்று கருதுவதாக தெரிவித்தார்.

ஆலோசனையுடன் அறிவுரை
தமிழக மக்களை தாம் நேசிப்பதாக கூறிய ராகுல், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் எடுக்க உள்ளதாக தெரிவித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர், முன்னாள் மாநிலத் தலைவர்கள், காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோரை எனது வீட்டில் ஆலோசனை நடத்த வருமாறு அழைத்துள்ளதாக கூறிய அவர், கட்சி வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு கருத்து வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையாகச் செயல்படுமாறு அனைவருக்கும் அறிவுறுத்தவுள்ளதாகவும் கூறினார்.

பாஜக தனிமைப்படுத்தப்படும்
தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுப்பதாகவும் கூறினார். தமிழகம் உட்பட விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில் பாஜக-வுக்கு எதிராக மிகப்பெரிய அலையை காங்கிரஸ் உருவாக்கும் என்று ராகுல்காந்தி கூறினார். அந்த அலையால் பாஜக தனிமைபடுத்தப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஒற்றுமை முக்கியம்
காங்கிரஸ் கட்சி வெற்றிக்கு தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் ஒற்றுமை மிகவும் முக்கியம் என்று ராகுல் கூறினார். எனவே கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு வெற்றி ஒன்றையே குறிக்கோளாக கருத்தில் கொண்டு அனைவரும் செயல்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

பாஜக ஆட்சியில் ஏமாற்றம்
கடந்த 18 மாத கால பாஜக தலைமையிலான ஆட்சி மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாக ராகுல்காந்தி கூறினார்.குறிப்பாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை மத்திய அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை என்று அவர் தெரிவித்தார்.

திமுகவை எதிர்க்காதது ஏன்?
தமிழ்நாட்டில் தேர்தல் கூட்டணி அமைப்பது தொடர்பாக மாநிலத் தலைமை எடுக்கும் முடிவைக் கட்சி மேலிடம் அங்கீகரிக்கும். தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க.வை எதிர்ப்பது போல, தி.மு.க.வை எதிர்க்காதது மாநிலக் கட்சித் தலைமையின் உரிமைக்கு உட்பட்டது என்றும் கூறினார்.

கோஷ்டி தலைவர்கள்
தமிழக சட்டசபை தேர்தல் குறித்து ராகுல்காந்தி உடனான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், சுதர்சன நாச்சியப்பன் உள்பட 13 பேர் டெல்லி விரைந்துள்ளனர். யாருக்கு என்ன பொறுப்பு தரப்போகிறாரோ ராகுல்காந்தி.












Click it and Unblock the Notifications